Tnpsc

மக்களாட்சி Notes 6th Social Science

6th Social Science Lesson 22 Notes in Tamil

22] மக்களாட்சி

‘குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு’

குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்.

ஆதிமனிதன், தொடக்கத்தில் வேட்டைச் சமூகமாகவும் உணவு சேகரிப்போராகவும் வாழ்ந்தனர். பிறகு ஆற்றோர குடியேறி விவசாயம் செய்யத்தொடங்கினர்.

மனிதர்கள் அப்படிக் குழுக்களாக வாழத்தொடங்கியதும், பழங்குடி அமைப்பு தோன்றியது. ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனித் தலைவர்கள் உருவானார்கள். நிலம், நீர், வளம் இவற்றை முன்னிறுத்தி குழுக்களுக்கு இடையில் மோதல்கள் உருவாகின. அதில் வென்றவர்கள் ஏனைய பழங்குடி இனக்குழுக்களை ஒன்றிணைத்து அரசுகளை உருவாக்கினர். இப்படிப்பட்ட சிறு அரசுகளின் ஒருங்கிணைப்பில் பேரரசுகள் உருவாகின.

இப்போது தலைவன் என்பவன் அரசர் என்ற நிலையை அடைந்திருப்பான். அப்படித்தான் அரசர்களின் தலைமையில் இயங்கும் மன்னராட்சி முறை தோன்றியது.

உலகெங்கும் இப்படியான அமைப்பே உருவாகி நீடித்தது. அரசர்கள் மற்றும் பேரரசர்களால் ஆளப்பட்ட நமது நாடு, பின்னர் இங்கிலாந்தின் ஆட்சியதிகாரத்தின்கீழ் வந்து சேர்ந்தது.

நாம் பல்லாண்டு காலம் போராடி, பல்வேறு தியாகங்களுக்குப் பிறகு இங்கிலாந்தின் காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்றோம்.

நாடு விடுதலை அடைந்ததும், நாம் மக்களாட்சி முறையை ஏற்றுக்கொண்டோம்.

  • ஒரு நாட்டின் குடிமக்கள் தேர்தல் வழியில் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும், அதன்மூலம் அரசு அதிகாரத்தில் நேரடியாகப் பங்கேற்பதையும்தான் மக்களாட்சி என்கிறோம்.
  • மக்களாட்சி அமைப்பில் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகாரம் மக்களிடம் இருக்கும். அவர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபடவும், அரசின் முடிவெடுக்கும் நடைமுறிஅகளில் பங்குபெறவும் இயலும். மக்களாட்சியில் சில வகைகள் உண்டு.
  • உலகெங்கும் பல்வேறு முறைகளில் மக்களாட்டி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் நேரடி மக்களாட்சி (Direct Democracy), மறைமுக மக்களாட்சி (அல்லது) பிரதிநிதித்துவ மக்களாட்சி (Representative Democracy) ஆகிய இரண்டும் பிரபலமான முறைகள்.

நேரடி மக்களாட்சி என்றால் என்ன?

நேரடி மக்களாட்சி முறையில் மக்களே சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றிருப்பார்கள். உதாரணமாக உங்களுடைய விளையாட்டு மன்றத்தை எடுத்துக்கொள்வோம். நீங்கள் எல்லோரும் ஒன்றுகூடி விவாதித்து மன்றத்திற்கான விதிகளை உருவாக்கிவிட முடியும். மேலும் இம்முறையில் மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதால் அவர்கள் ஒவ்வொருவரின் பார்வையும் வெளிப்படும்.

ஆனால் இறுதி முடிவினை, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரிக்கும் ஒன்றை முடிவாக ஏற்றுக்கொள்வோம். எஞ்சியவர்களும் அம்முடிவிற்குக் கட்டுப்படுவார்கள். இம்முறைதான் நேரடி மக்களாட்சி என்று அழைக்கப்படுகிறது.

பிரதிநிதித்துவ மக்களாட்சி என்றால் என்ன?

உங்களுடைய விளையாட்டு மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை இப்போது பெருகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம். நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் தினசரி கூடி விவாதித்து முடிவுகள் எடுப்பது சாத்தியமில்லை. அப்படியான சூழல் வரும்போது உறுப்பினர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு குழு உருவாக்கப்பட வேண்டும்.

அக்குழுவினர் உறுப்பினர்கள் சார்பில் மன்றத்தை நிர்வகிப்பர். அவர்களைத் தேர்ந்தெடுக்கும் விதமாக ஓட்டெடுப்பு நடைபெறும். உதாரணமாக தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் போன்ற பதவிகளுக்குப் பலரும் போட்டியிடுவர். முடிவில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவினைப் பெற்றவர் அந்தந்தப் பதவிகளை அடைவார்கள். அவர்களுக்கு ஏனைய உறுப்பினர்கள் சார்பாக ஜனநாயக ரீதியாக முடிவெடுக்கும் அதிகாரம் கிடைக்கும். இதையே பிரதிநிதித்துவ மக்களாட்சி என்று கூறுகிறோம்.

ஜனநாயக ரீதியாக முடிவெடுப்பது (Democratic Decision making) என்றால் என்ன?

மக்களாட்சி அமைப்புகளில் முடிவெடுக்கும் அதிகாரம் தலைவரிடம் குவிந்திருக்காது. மாறாக அவ்வதிகாரம் ஒரு குழுவிடம்தான் இருக்கும். சட்டதிட்டங்களுக்கும், விதிமுறைகளுக்கும் உட்பட்டு இயங்கும் அக்குழு, தொடர்புடையோர் அனைவரையும் உள்ளடக்கிய வெளிப்படையான உரையாடல்களை முன்னெடுக்கும். பின்னர் அவர்களிடையே ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்பட்டதும் இறுதி முடிவினை எடுக்கும். இதைத்தான் ஜனநாயக ரீதியாக முடிவெடுத்தல் என்கிறோம்.

  • ஒரு குழுவிற்கான விதிகள் இருப்பதுபோல் நமது நாட்டை நிர்வகிப்பதற்கான விதிகளும் இருக்கும்.

இந்தியா போன்றதொரு மக்கள்தொகை மிக்க நாட்டில் அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் மக்கள் அனைவரும் விதிகள், விதிமுறைகள், உரிமைகள் மற்றும் கடமைகளை அறிந்து பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. நமது அரசமைப்புச்சட்டம் அத்தகைய வழிமுறைகளை நமக்கு வழங்கியுள்ளது. அவை நமது நாட்டின் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

அரசமைப்புச்சட்டம் நமக்கு என்ன மாதிரியான உரிமைகளை வழங்கியுள்ளது?

அது இந்தியர் ஒவ்வொருவருக்கும் சுதண்டிரம், சமத்துவம் மற்றும் நீதிபெறும் உரிமையை உறுதி செய்துள்ளது.

வேறு எவையெல்லாம் அதில் இடம்பெற்றுள்ளன?

அது அடிப்படை அரசியல் கொள்கைகளை வரையறுத்துள்ளதோடு, அரசு நிறுவனங்களின் வடிவமைப்பு, அவை பின்பற்றவேண்டிய வழிமுறைகள், அவற்றின் அதிகாரம் மற்றும் கடமைகளையும் விளக்குகிறது. மேலும் குடிமக்களுக்கான உரிமைகள், கடமைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளையும் நிர்ணயம் செய்துள்ளது. இப்படியாக அது ஒரு சிறப்பான கட்டமைப்பை நமக்கு வழங்கியுள்ளது.

  • இந்திய அரசமைப்புச்சட்டம்தான் உலகில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டங்களிலேயே மிகப்பெரியது. இதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் தலைமையிலான அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கியது. அதனால்தான் அவர் நமது அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளராகக் கருதப்படுகிறார்.

“மக்களாட்சியின் பிறப்பிடம் கிரேக்கம் ஆகும்”

Democracy என்ற ஆங்கில சொல் Demos மற்றும் Cratia என்ற இரு கிரேக்க சொற்களிலிருந்து பெறப்பட்டதாகும். Demos என்றால் மக்கள் என்றும் Cratia என்றால் அதிகாரம் அல்லது ஆட்சியைக் குறிக்கும்.

மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி”

  • ஆப்ரகாம் லிங்கன்

மக்களாட்சியின் நோக்கம்

மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சியமைப்பு மக்களாட்சி என்று அழைக்கப்படுகிறது.

மக்களாட்சி அமைப்பில் அதிகாரம் மக்களிடம் இருக்கும். அதற்கு அவர்கள் முடிவெடுக்கும் உரிமையைப் பெற வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வொரு தனிநபரும் முடிவெடுக்கும் வழிமுறைகளில் நேரடியாகப் பங்கேற்க இயலாது என்பதால் முடிவெடுக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவ அரசிற்கு வழங்கப்பட்டுள்ளது. மக்களாட்சி அரசில், 18 வயது நிறைவுற்ற அனைத்துக் குடிமக்களுக்கும் தங்களுக்கான பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பிரதிநிதியும் மக்கள் நலனைக் காப்பதைத் தனது கடமையாகக் கொள்ளவேண்டும்.

  • 2007ல் ஐ.நா.சபை செப்டம்பர் 15ஆம் நாளை உலக மக்களாட்சி தினமாக அறிவித்துள்ளது.

உலகெங்கும் மக்களாட்சி

உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு நியூஸிலாந்து (New Zealand) ஆகும் (1893). ஐக்கிய பேரரசில் (United Kingdom) 1918ஆம் ஆண்டும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (United states of America) 1920-ஆம் ஆண்டும்தான் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. அதேகாலகட்டத்தில் இந்தியாவில் பணக்காரர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை வழங்கப்பட்டிருந்தது. மகாத்மா காந்தி உட்படப் பல தலைவர்கள் அனைவருக்கும் ஓட்டுரிமை என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். இன்று இந்தியாவில் 18 வயது நிறைவடைந்த ஒவ்வொருவருக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டுள்ளது. (உலகளாவிய வயதுவந்தோர் உரிமைகளின்படி).

  • இந்தியகுடிமக்களில் 79% பேர் தங்களது நாட்டின் மக்களாட்சியின்மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக உலக அளவிலான இப்பட்டியலில் இந்தியாவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.

உலகின் பழமையான மக்களாட்சி நாடுகள்

வ.எண் மக்களாட்சி நாடு காலம் அமைவிடம் சிறப்புக் கூறுகள்
1 கிரேக்கம் கி.மு. (பொ.ஆ.மு) 5ஆம் நூற்றாண்டு கிரீஸ் அரசியல் தத்துவத்தின் அடித்தளம்
2 ரோமானியப் பேரரசு கி.மு. (பொ.ஆ.மு) 300 – 50 தீபகற்ப இத்தாலி, ரோம் நாகரிக வளர்ச்சியின் உலகளாவிய விரிவாக்கம்
3 சான் மரினோஸ் கி.பி. (பொ.ஆ)301 இத்தாலி பழமையான அரசியலமைப்பு தற்போதும் நடைமுறையில் உள்ளது.
4 ஐஸ்லாந்து கி.பி. (பொ.ஆ) 930 திங்வேளிர் உலகிலேயே பழமையான மற்றும் நீண்ட காலமாக செயல்பட்டுவரும் நாடாளுமன்றத்தைக் கொண்டது.
5 மனிதத் தீவு (Isle of Man) கி.பி. (பொ.ஆ) 927 இங்கிலாந்திற்கும் அயர்லாந்திற்கும் இடையே உள்ளது. மன்னராட்சியின் கீழ் சுயாட்சி
6 இங்கிலாந்து கி.பி. (பொ.ஆ) 13ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து 1215இல் எழுதப்பட்ட மகாசாசனம் (மாக்னா கார்டா)
7 அமெரிக்க ஐக்கிய நாடுகள் கி.பி. (பொ.ஆ) 1789 அமெரிக்க ஐக்கிய நாடுகள் மிகப் பழமையான மக்களாட்சிகளுள் ஒன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!