Tnpsc

ஊடகமும் ஜனநாயகமும் Notes 7th Social Science Lesson 15 Notes in Tamil

7th Social Science Lesson 15 Notes in Tamil

15] ஊடகமும் ஜனநாயகமும்

அறிமுகம்:

இந்தியா பாரம்பரியமிக்க நாட்டுபுறக் கலைகள் பலவற்றைக் கொண்டது. அக்கலைகள் மூலம் கிராமப்புற மக்களிடையே கருத்துகள் பரிமாறப்பட்டன. ஹரிகதைகள் மற்றும் கூத்து போன்ற கலைகளின் மூலம் சமயக் கதைகள் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டன. இவை அந்த காலத்தில் சமய ஊடகங்களாகச் செயல்பட்டன. இச்சமய ஊடகங்கள் இசை, நடனம், சொற்பொழிவு, கதை சொல்லல், பொம்மலாட்டம் போன்றவற்றின் கூட்டுக்கலைகளாக இருந்தன. இவை மக்களிடையே நேரடியாக கருத்துகளை கொண்டு சேர்த்தன. இதன் மூலம் சமூகத்திற்குப் பயனுள்ள கருத்துகள் கூறப்பட்டன. இன்றைய நவீன ஊடகமுறை என்பது சிறு மற்றும் குறு அளவிலான கூட்டங்கள், கருத்தரங்குகள், நாடகங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் கருத்துப்பட்டறைகளாக இருக்கின்றன. அச்சு ஊடகம் என்பது மக்களின் பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது, ஏனெனில் இது மக்களுக்குத் தகவல்களை வழங்கக்கூடியதாகவும் கல்வியறிவு ஊட்டக்கூடியதாகவும் மற்றும் பொது மக்களின் பாதுகாவலனாகவும் செயல்பட்டு வருகின்றது. இனி நாம் ஊடகத்தின் பங்களிப்பைப் பற்றி அறிந்து கொள்வோம்.

ஊடகம்-விளக்கம்:

ஓவ்வொரு தனிமனிதனும் ஊடகத்தின் வெளிப்பாடாகும். ஒரு நபர் மற்ற நபர்களுடனும், நிறுவனங்களுடனும் ஊடகத்தின் மூலம் தொடர்பு கொள்கிறார். ஊடகம் என்பது ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளக் கூடிய சாதனமாகும். ஊடகம் என்பது அச்சு, ஒலி, ஒளி என அனைத்து வகை பரப்பு சாதனங்களையும் உள்ளடக்கியதே ஆகும். ஊடகமானது (Media) மீடியம் (Medium) என்ற ஆங்கில வார்த்தையின் பன்மையாகும் (Plural). ஊடகம் தகவல்கள் செய்திகள், உணர்வுகள், கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள கூடியதாகவும் இருக்கிறது.

இத்தகவல் தொடர்பு பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

தனிமனித தொடர்பு – கடிதங்கள், தொலைப்பேசி, அலைப்பேசி, மின்னஞ்சல் மற்றும் தொலை நகல் ஆகியன தனிமனித தொடர்பு சாதனங்களாகும். இவை ஒரு நபர் மற்றொரு நபரோடு தனியாகவோ குழுவாகவோ தொடர்பு கொள்வதற்கு பயன்படுகிறது.

வெகுஜன தொடர்பு – செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி ஆகியன வெகுஜன மக்களோடு தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. எனவே இவை வெகுஜென ஊடகம் என்று அழைக்கப்படுகின்றன.

மக்களாட்சியின் நான்காவது தூண்:

சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை மற்றும் ஊடகம் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக கருதப்படுகிறது. ஊடகம் மற்ற மூன்று துறை செயல்பாடுகளின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்கிறது. இந்த நான்காவது தூண் நாட்டின் தொலை தூர பகுதிகளில் வாழும் அனைத்து மக்களும் நாட்டின் பிற பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை அறிய உதவுகிறது. உண்மையில் ஒரு ஜனநாயக நாட்டில் ஊடகம் என்பது தகவல்கள் மற்றும் அறிவை வழங்கும் மிக முக்கிய சாதனமாக செயல்படுகிறது.

ஊடகத்தின் முக்கியத்துவம்:

இவ்வுலகில் ஊடகம் மிகவும் சக்தி வாய்ந்த கட்டமைப்பு ஆகும். இது நம்மை சுற்றியுள்ள பல்வேறு சமூக, அரசியல் மற்றும் பொருளாதார செயல்பாடுகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் திகழ்கிறது. இதனை மக்கள் பல்வேறு தேவைகளுக்காக சார்ந்திருக்கின்றனர். குறிப்பாக தகவல்கள் மற்றும் பொழுதுபோக்கிற்காக சார்ந்துள்ளனர். ஊடகம் மக்களை விழிப்போடு இருக்கச் செய்கிறது. மேலும் சமூக மாற்றத்திற்கான மிக முக்கிய சாதனமாகவும் இருக்கிறது. ஊடகம் உலகின் அன்றாட நிகழ்வுகளை மட்டுமல்லாமல் ஒரு அரசின் பலம் மற்றும் பலவீனத்தை வெளிக்கொண்டு வருகிறது. தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களை மக்களிடம் விளம்பரப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் தேசிய மற்றும் பன்னாட்டு செய்திகளை ஒளிப்பரப்புகின்றன. பல திரைப்படங்களில் சமூகப் பிரச்சனைகள் எழுத்துரைக்கப்பட்டுள்ளன. எந்த வொரு விடயங்களிலும் ஊடகம் நடுநிலையான அறிக்கையை வழங்குகின்றது. இது சமூக, அரசியல் பிரச்சனைகளுக்கெதிராகவும், சமூக அநீதிக்கு எதிராகவும் போராடுகிறது. மேலும் இது மக்களின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

மக்களிடம் பொதுக் கருத்தினை ஏற்படுத்துவதில் – ஊடகம்:

ஊடகம் மக்களிடையே ஒரு பொதுவான கருத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. (ஒரு குறிப்பிட்ட பிரச்சனையில் மக்களின் பொதுக்கருத்து) இது சமகாலத்தின் சக்தி வாய்ந்த கருவியாகும். மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. இது மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த பார்வை மற்றும் புரிதலில் பொதுமைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெகுஜன ஊடகம் அன்றாட நிகழ்வுகளைப் பற்றி நேர்மையாகவும், நுட்பமாகவும், நடுநிலையாகவும் தருகின்றது. செய்தித் தாள்கள் அரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் சாதனமாக திகழ்கிறது. இவ்வாறு மக்களுக்கு சமூகத்தில் நடைபெறுகின்ற முக்கிய பிரச்சனைகளை பற்றிய கருத்துக்களை தெரிவிக்க அச்சு ஊடகங்களும், மின்னணு ஊடகங்களும் உதவுகின்றன.

நெறிமுறை மற்றும் பொறுப்பு:

நெறிமுறை என்பது நம் வாழ்க்கையை வாழ தீர்மானிக்கும் மதிப்பீடுகளின் தொகுப்பாகும் எனவே இவை முறையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அவசியமாகும். ஊடக நெறிமுறை என்பது நல்ல நடத்தைக்குரிய கொள்கைகள் அடங்கிய தொகுப்பாகும். ஊடகம் என்பது அவற்றின் செயல்பாடுகள் மற்றும் எழுத்தின் மூலமும் பிரதிபலிக்க வேண்டும். எளிதில் உணர்வுகளை தூண்டக்கூடிய தேவையற்ற செய்திகளை தவிர்க்க வேண்டும்.

ஊடகங்களின் அடிப்படை நோக்கமானது நேர்மையான, துல்லியமான, நடுநிலையான, நாகரிகமான மற்றும் நல்ல மொழிநடையில் மக்கள் நலன் சார்ந்த தகவல்கள், செய்திகள், கருத்துகள், ஆகியவற்றை மக்களுக்கு வழங்குவதாகும். ஒரு அரசு சிறப்பாக செயல்படுவதற்கு விழிப்பான மற்றும் சுதந்திரமான ஊடகம் மிகவும் அவசியமாகும்.

இது மக்களுக்கு தேவையான தகவல்களை சேகரிப்பதற்கான உரிமையை பெற்றிருக்கிறது. அதே சமயம் எந்த விதத்திலும் மக்களின் உணர்வுகளை தூண்டும் விதத்தில் இருத்தல் கூடாது. நம்பகத் தன்மையான தகவல்களை மக்களிடம் வழங்குவதில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

ஜனநாயகத்தில் ஊடகத்தின் பங்கு:

ஊடகமானது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும். நமது ஜனநாயக சமுதாயத்தில் ஊடகம் பொது மக்களின் கருத்துக்களை செயல்படுத்தும் உந்து சக்தியாகும். இது ஜனநாயகத்தின் மதிப்புகளை பலப்படுத்துகிறது. இது மக்களுக்கு அறிவையும், வலிமையும் அளிக்கிறது. மேலும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வையும், ஏற்படுத்துகிறது. அரசின் வெளிப்படைத்தன்மையும், அவற்றின் பொறுப்பினையும் உறுதி செய்கிறது. ஊடகம் அரசின் ஒவ்வொரு செயல்பாட்டினையும் மக்களிடம் எடுத்துச் செல்கிறது. இதன் மூலம் அரசின் செயல்பாடுகளையும் மக்களின் அன்றாட நிகழ்வுகளையும் குடிமக்கள் அறிந்து கொள்கிறார்கள்.

இது நடப்பு செய்திகளை பற்றிய விவாதத்தை ஏற்படுத்துகிறது. அதனால் ஒரே பிரச்சினைகளுக்குப் பல்வேறு கருத்துக்களை பெற முடிகிறது. ஊடகமானது மக்களுக்கு அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை நினவைூட்டுகிறது. இது கிராமப்புற மக்களுக்கு கல்வி அளிக்கிறது. பாராளுமன்றம் மற்றும் ஜனநாயகம் ஆகிய இரண்டும் ஊடகத்தின் கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே வலிமை அடையும். ஊடகம் அறிக்கைகள் அளிப்பது மட்டுமல்லாது அரசிற்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுகிறது. மேலும் ஊடகம் அரசாங்கத்தை கண்காணிக்கும் பணியையும் செய்கிறது. ஊடகம் இல்லாத ஜனநாயகம் என்பது சக்கரம் இல்லாத வாகனத்திற்கு ஒப்பாகும்.

உள்ளுர் ஊடகம்:

பொதுவாக ஊடகம் என்பது தேசிய மற்றும் உலக செய்திகளை அளிப்பதாகும். உள்ளுர் ஊடகம் என்பது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் மக்களின் நலனுக்காக செயல்படுவதாகும்.

முடிவுரை:

தகவல் மற்றும் தொழில்நுட்ப உலகில் வெகுஜன மக்களுக்கு தகவல்களை அளிப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. ஊடகம் மக்களின் ஒற்றுமையையும், சமூக அமைதியையும் சீர்குலைக்கும் வண்ணம் எதையும் வெளியிடா வண்ணம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். ஆரோக்கியமான சமுதாயத்திற்கு ஊடகம் நல்ல தகவல்களையும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் செயல்பட வேண்டும். ஊடகம் இந்த உலகை சிறியதாகவும் மக்களுக்கு மிக நெருக்கமாகவும் மாற்றியுள்ளது.

பாடச்சுருக்கம்:

  • மக்களாட்சியில் ஊடகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • ஊடகம் என்பது தொடர்பு கொள்ளும் முறையாகும் மீடியா (Media) என்பது மீடியம் (Medium) என்ற ஆங்கில வார்த்தையின் பன்மை (Plural) ஆகும்.
  • நவீன ஊடகங்களான தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ்கள் மற்றும் இணையம் மூலம் கோடிக்கணக்கான மக்களை தகவல்கள் சென்றடைய உதவுகின்றன.
  • தொழிலநுட்ப மாற்றத்தினால் மக்கள் ஒருவருக்கொருவர் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது.
  • மக்களிடையே ஒரு தகவலைப் பற்றி பொதுவான கருத்தினை ஏற்படுத்தி விழிப்புணர்வை உருவாக்குகிறது.
  • ஊடகம் இந்த உலகத்தை மக்களுக்கு மிக அருகில் கொண்டு வந்திருக்கிறது. மேலும், உலகில் எங்கு ஒரு நிகழ்வு நடந்தாலும் அதனை உடனடியாக மக்களுக்கு உண்மைத்தன்மையுடன் கொண்டு சேர்க்கிறது.

சொற்களஞ்சியம்:

ஒளிபரப்பு Broadcast Transmit by radio or television
ஆட்சி அமைப்பு Polity System of government
சமகாலத்தில் Contemporary Present-day
நெறிமுறைகள் Ethics Moral Principles
நடுநிலையான Unbiased Impartial
உண்மையான Authentic Genuine/Original

உங்களுக்கு தெரியுமா?

அச்சு இயந்திரம் ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் என்பவரால் 1453இல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஊடகத்தின் வகைப்பாடு:

குறுகிய தொடர்பு ஊடகம் கேபிள் தொலைக்காட்சி, நேரடி அஞ்சல், கருத்தரங்கு
தொலைத்தொடர்பு ஊடகம் திரைப்படங்கள் தொலைக்காட்சி, வானொலி
அச்சு ஊடகம் செய்தித்தாள்கள், இதழ்கள், பத்திரிக்கைகள் புத்தகங்கள், சுவரொட்டிகள், அறிக்கைகள்
இணைய ஊடகம் கூகுள் இணைய தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள்
சமூக ஊடகம் கீச்சகம், முகநூல், புலனம்/கட்செவி அஞ்சல் மற்றும் படவரி

அகில இந்திய வானொலி:

1956ஆம் ஆண்டிலிருந்து ஆகாச வானி (வானிலிருந்து வரும் ஒலி) என்ற பெயரில் வானொலி ஒலிபரப்பை செய்து வருகிறது. இது 1936ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

மக்களாட்சியின் கோட்பாடு:

மக்களாட்சி என்றால் மக்களால் ஆட்சி செய்யப்படுதல் என்பதாகும். இது இரண்டு கிரேக்க சொற்களால் ஆனது. டெமோஸ் (Demos) மக்களைக் குறிக்கிறது. க்ராடோஸ் (Kratos) அதிகாரம் அல்லது ஆட்சி என்று பொருள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!