Samacheer NotesTnpsc

இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் Notes 10th Social Science Lesson 6 Notes in Tamil

10th Social Science Lesson 6 Notes in Tamil

6. இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

அறிமுகம்

  • மக்கள் தொகையைப் பற்றி கற்றல் என்பது ஒரு பிரதேச புவியியலைப் படிப்பதில் உள்ள முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
  • மக்கள் தொகை பல கூறுகளை உள்ளடக்கியது. இதில் மிக அடிப்படையானது, அதன் எண்ணிக்கை, கலவை, பரவல் மற்றும் அடர்த்தி ஆகும்.
  • எனவே மக்கள் தொகைக்கூறுகள் பற்றி படித்தல் அவசியமான ஒன்று. இந்த அம்சங்களைப் பற்றிய ஆய்வு நாட்டின் மனித சக்தியைப் பற்றி வெளிப்படுத்துவதாக அமைகிறது.
  • மக்கட்தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி இந்திய மக்கட்தொகை 1,210.19 மில்லியன்கள் (1,21,01,93,423) ஆகும். இது 2001 கணக்கெடுப்பை விட 19.31 கோடி அதிகமாகும்.
  • இந்திய மக்கள் தொகை ஆய்வறிக்கை, மக்களியல் குறித்த விரிவான தகவல்களை அளிக்கிறது,. இவற்றுடன் இந்தியாவின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புப் பற்றியும் காண்போம்.

மக்கள்தொகை

  • ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு நாட்டில் வசிக்கின்ற மொத்த மக்களின் எண்ணிக்கையே ஒரு நாட்டின் மக்கள் தொகை என்று அழைக்கப்படுகிறது.
  • சீனாவிற்கு அடித்தபடியாக உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
  • உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா 2.4 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் உலக மக்கள் தொகையில் சுமார் 17.5 சதவீதத்தை கொண்டுள்ளது.
  • இந்திய மக்கள் தொகை விகிதம் அதன் பரப்பு விகிதத்தை விட மிக அதிகமாக உள்ளதை இது காட்டுகிறது.
  • உலகில் உள்ள ஆறு நபர்களில் ஒருவர் இந்தியராக உள்ளார். அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஜப்பான் ஆகிய ஆறு நாடுகளின் மொத்த மக்கள் தொகை 1214.3 மில்லியன் ஆகும்.
  • இந்திய மக்கள் தொகை ஏறக்குறைய இந்த ஆறு நாடுகளின் மக்கள் தொகைக்குச் சமமாக உள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு

  • மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட பகுதி அல்லது முழுபகுதியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உள்ள மக்களின் பொருளாதார மற்றும் சமூக புள்ளி விவரங்களை சேகரித்து, தொகுத்து மற்றும் பகுப்பாய்வு செய்து மக்களியல் பற்றிய விவரங்களை அளித்தல் ஆகும்.
  • இந்த கணக்கெடுப்பு பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள், நிர்வாகம், திட்டமிடல், கொள்கைகள் உருவாக்குதல், அரசாங்கத்தின் பல்வேறு திட்ட மேலாண்மை மற்றும் மதிப்பீடு செய்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
  • இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. முழுமையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் 15வது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 ஆண்டு நடைபெற்றது.

மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்

  • ‘மக்கள் தொகை பரவல்’ என்பது புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்விடைவெளியில் உள்ளார்கள் என்பதைக் குறிக்கிறது. இந்திய மக்கள் தொகை பரவல் வளங்களின் பரவலுக்கேற்ப சீரற்று காணப்படுகிறது.
  • தொழில் மையங்கள் மற்றும் செழிப்பான வேளாண் பிரதேசங்கள் மக்கள் தொகை செறிவுமிக்கதாக காணப்படுகிறது. அதே சமயம் மலைப்பிரதேசங்கள் வறண்ட நிலைப்பகுதிகள், வனப்பகுதிகள், தொலைதூரப் பகுதிகள் போன்ற பகுதிகளில் மக்கள்தொகைக் குறைவாகவும், மக்களற்றும் காணப்படுகிறது.
  • நிலப்பரரப்பு, காலநிலை, மண், நீர் பரப்புகள், கனிம வளங்கள், தொழிலகங்கள், போக்குவரத்து மற்றும் நகரமயமாக்கல் ஆகியவை நாட்டின் மக்கள்தொகை பரவலைப் பாதிக்கும் முக்கிய காரணிகளாகும்.
  • 199.5 மில்லியன் மக்கட்தொகையைக் கொண்ட உத்திரப்பிரதேச மாநிலம் இந்தியாவில் அதிக மக்கட்தொகை மாநிலமாகும்.
  • இதனைத் தொடர்ந்து மகாராஷ்ட்ரா (112.3 மில்லியன்) பீகார் (103.8 மில்லியன்) மேற்கு வங்கம் (91.3 மில்லியன்) மற்றும் ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசம் (84.6 மில்லியன்) ஆகிய ஐந்து மாநிலங்கள் நாட்டின் மக்கள் தொகையில் பாதியைக் கொண்டுள்ளன.
  • உத்திரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் மட்டும் நாட்டில் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதி வாழ்கின்றனர்..
  • இந்தியாவில் மிக்குறைந்த மக்கள்தொகை கொண்ட மாநிலம் சிக்கிம் (0.61 மில்லியன்) ஆகும். புதுடெல்லி 16.75 மில்லியன் மக்கட்தொகையுடன் யூனியன் பிரதேசங்களிடையே முதலிடம் வகிக்கிறது.
  • நாட்டின் மக்கட்தொகை பரவல் சீரற்று காணப்படுவதற்கு பௌதீக, சமூக பொருளாதார மற்றும் வரலாற்று காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • பௌதீக காரணிகள் என்பது நிலத்தோற்றம், காலநிலை, நீர், இயற்கைத் தாவரங்கள், கனிமங்கள் மற்றும் ஆற்றல் வளங்களை உள்ளடக்கியது.
  • மதம் , கலாச்சாரம், அரசியல் பிரச்சினைகள், பொருளாதாரம் , மனித குடியிருப்புகள், போக்குவரத்து வலைப்பின்னல், தொழில்மயமாக்கல், நகரமயமாதல், வேலை வாய்ப்புகள் போன்றவை முக்கிய சமூக பொருளாதாரக் காரணிகளாகும்.

மக்கள்தொகை அடர்த்தி

  • மக்கள் தொகை அடர்த்தி மக்கள்தொகை பரவலில் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது.
  • இது சராசரியாக ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது.
  • 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் சராசரி மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 382 ஆகும்.
  • உலகின் மக்களடர்த்தி மிகுந்த பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் மிக அதிக மக்களடர்த்தியைக் கொண்ட மாநிலமாக பீகாரும் (1106 பேர்/ச.கி.மீ) மிக குறைந்த மக்கள் அடர்த்தியைக் கொண்ட மாநிலமாக அருணாச்சலப் பிரதேசமும் (17 பேர்/ச.செ.மீ) உள்ளது.
  • யூனியன் பிரதேசங்களில் புதுடெல்லி (11320 பேர்/ச.கி.மீ) அதிக மக்களர்த்தி கொண்டதாகவும், அந்தமான் நிக்கோபர் தீவுகள் (46 பேர்/ச.கி.மீ) உள்ளன.
மக்கள் அடர்த்தி தன்மை மாநிலங்கள் / யூனியன் பிரதேசம் மக்கள் அடர்த்தி எண்ணிக்கை (ஒர் ச.கி.மீ)
மிக குறைந்த மக்கள் அடர்த்தி (ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 150க்கும் குறைவான) அருணாச்சல் பிரதேசம் 17
அந்தமான் நிக்கோபார் தீவு 46
மிசோரம் 52
சிக்கிம் 86
மணிப்பூர் 115
நாகலாந்து 119
இமாச்சல பிரதேசம் 123
ஜம்மு காஷ்மீர் 124
மேகலாயா 132
குறைந்த மக்கள் அடர்த்தி (150 லிருந்து 300 நபர்கள் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு) உத்ரகாண்ட் 189
சத்தீஸ்கர் 189
இராஜஸ்தான் 200
ஒடிசா 270
மிதமான மக்கள் அடர்த்தி (300 லிருந்து 500 நபர்கள் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு) மத்தியப்பிரதேசம் 308
ஆந்திரபிரதேசம் 308
குஜராத் 308
கர்நாடகா 319
திரிபுரா 350
மகாராஷ்டிரா 365
கோவா 394
அசாம் 398
ஜார்கண்ட் 414
அதிக மக்கள் அடர்த்தி (500 லிருந்து 1000 நபர்கள் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு) பஞ்சாப் 551
தமிழ்நாடு 555
ஹரியானா 573
தாதர் நாகர் ஹைவேலி 700
உத்திர பிரதேசம் 829
கேரளா 860
மிக அதிக மக்கள் அடர்த்தி (1000 அதிகமான நபர்கள் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு) மேற்கு வங்கம் 1,028
பீகார் 1,106
இலட்சத்தீவுகள் 2,149
டாமன் டையூ 2,191
புதுச்சேரி 2,547
சண்டிகர் 9,252
டெல்லி 11,320

மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் மாற்றம்

  • மக்கள் தொகை வளர்ச்சி விகிதம், மக்கள் தொகையின் ஒரு முக்கியமான அம்சமாகும். இது மக்கள்தொகை மாற்றத்தைப் புரிந்து கொள்ள உதவுவதோடு மட்டுமல்லாமல் கடந்த கால சமுதாயத்தின் மாற்றங்களைத் தெரிந்து கொண்டு வருங்கால மக்கள் தொகையின் பண்புகளை கணிக்க உதவுகிறது.
  • மக்கள் தொகை வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் ஒரு நாட்டின் மக்கள்தொகை எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றத்தை உணர்த்துகிறது.
  • மக்கள் தொகை வளர்ச்சி சதவீதத்தில் குறிப்பிடப்பட்டு, மக்கள் தொகை வளர்ச்சி விகிதமாக விவரிக்கப்படுகிறது.

  • கீழ்க்கண்ட கோட்டுப்படம் 1901ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையான பத்தாண்டுகள் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தைக் காண்பிக்கிறது.
  • இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி பல்வேறு காலக்கட்டங்களைக் கடந்து வந்துள்ளது.
  • 1901ஆம் ஆண்டு 238 மில்லியனாக இருந்த நாட்டின் மக்கல் தொகை, ஒரு நூற்றாண்டிற்கு மேற்பட்ட காலத்தில் 1210 மில்லியனாக அதிகரித்துள்ளது.

இந்திய மக்கள்தொகை வளர்ச்சியின் பல்வேறு நிலைகள்

தேக்க நிலை காலம் : 1901 – 1921

முதல் இருபது ஆண்டு (1901 – 1921) காலக்கட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 15 மில்லியன்கள் அதிகரித்தது. 1921-இல் மக்கள் தொகை எதிர்மறை வளர்ச்சி விகிதமாக (-0.31%) ஆக பதிவாகியுள்ளது. இது இந்திய மக்கள் தொகை வரலாற்றில் ஒருமுறை மட்டுமே ஏற்பட்ட நிகழ்வாகும். இது மக்களியல் வரலாற்றில் ‘பெரும் மக்களியல் பிளவு ஆண்டு’ என அழைக்கப்படுகிறது.

நிலையான வளர்ச்சிக் காலம் (இரண்டாம் காலக்கட்டம் ) -1921 – 51

இரண்டாம் கட்டமான இந்த 30 ஆண்டுகளில் (1921 – 51) இந்தியாவின் மக்கள் தொகை 110 மில்லியன்கள் அதிகரித்தது.

நிலையான வளர்ச்சிக் காலம் (மூன்றாம் காலக்கட்டம்) 1951 – 1981

மூன்றாவது 30 ஆண்டுகளில் (1951 -1981) காலக்கட்டத்தில் 1951இல் 361 மில்லியன்களாக இருந்த மக்கட்தொகை 1981-ல் 683 மில்லியன்களாக வளர்ச்சியடைந்தது. முந்தைய கால வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் இக்காலத்தில் வளர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி உள்ளது. இந்த அதிவேக வளர்ச்சியை “மக்கள் தொகை வெடிப்பு” என்று குறிப்பிடுகிறோம்.

அதிக வளர்ச்சியிலிருந்து வளர்ச்சி குன்றல்

தென்பட ஆரம்பித்த காலம் 1981 – 2011

இக்கால காட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 685 மில்லியனிலிருந்து 1210 மில்லியனாக அதிகரித்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் ஒரு கணக்கெடுப்பு காலத்திலிருந்து மற்றொரு கணக்கெடுப்புக் காலத்திற்கு குறைந்துகொண்டு வருகின்றது. இது இந்திய மக்கள் தொகை வளர்ச்சி விகித வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

மக்கள் தொகை மாற்றம்

  • மக்கள் தொகை மாற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியிலிருந்து மற்றொரு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் மக்கள்தொகை அதிகரிப்பதையோ அல்லது குறைவதையோ குறிப்பிடுவதாகும்.
  • பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் மற்றும் இடப்பெயர்வு ஆகியவை மக்கள் தொகை வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. மேலும் இவை மூன்றும் மக்கள் தொகையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
  • பிறப்பு விகிதம் என்பது ஒரு வருடத்தில் 1000 மக்கள் எண்ணிக்கையில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையாகும்.
  • இறப்பு விகிதம் எனப்படுவது ஓர் ஆண்டில் 1000 மக்கள் தொகையில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும்.
  • இந்தியாவில் இறப்பு விகிதத்தின் விரைவான சரிவு மக்கள் தொகையின் துரித வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

இடப்பெயர்வு

  • இடப்பெயர்வு என்பது ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் இடம் பெயர்ந்து செல்வதாகும். இது உள்நாட்டு இடப்பெயர்வு (ஒரு நாட்டின் எல்லைக்குள்) மற்றும் சர்வதேச இடப்பெயர்வு (நாடுகளுக்கு இடையே) என இருவகைப்படும்.
  • உள்நாட்டு இடப்பெயர்வு நாட்டின் மக்கள் தொகையில் மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால் ஒரு நாட்டின் மக்கள் தொகை பரவல் மாற்றத்திற்குக் காரணமாக அமைகிறது.
  • இடப்பெயர்வானது மக்கள்தொகை பரவல் மற்றும் கலவையின் மாற்றத்தை ஏற்படுத்தும் காரணியாக அமைகிறது.
  • இந்தியாவில் இடப்பெயர்வு கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்தை நோக்கி பெருந்திரளாக காணப்படுகிறது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை மற்றும் தகுதிக்கேற்ப வேலையின்மை ஆகியவை இடப்பெயர்வுக்கு உந்து காரணிகளாக உள்ளன. நகர்ப்புற பகுதிகளில் தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக அதிக வேலைவாய்ப்பு மற்றும் அதிக ஊதியம் புலம்பெயர்தலுக்கு இழுக்காரணிகளாக உள்ளன.
  • 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைன் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 121 கோடி மக்களில் 45 கோடி மக்கள் இடம் பெயர்ந்தவர்களாவார்கள். இந்த 37 சதவீத இடப்பெயர்வில் 48 சதவீதம் பெண்களும் 52 சதவீதம் ஆண்களும் உள்ளனர்.

மக்கள் தொகை கலவை

  • மக்கள் தொகைக் கலவை என்பது பல்வேறு பண்புகளாக வயது, பாலினம், திருமணநிலை, சாதி, மதம், மொழி, கல்வி, தொழில் போன்றவற்றை உள்ளடக்கியது.
  • மக்கள் தொகை கலவை பற்றி கற்பது சமூக பொருளாதார மற்றும் மக்கள் தொகையின் அமைப்பை அறிய உதவுகிறது.

வயதுக்கலவை

  • வயது கலவை என்பது ஒரு நாட்டின் மக்கள் தொகையில் உள்ள பல்வேறு வயது பிரிவினர் எண்ணிக்கையை குறிக்கிறது.
  • இது மக்கள்தொகை குணாதிசியங்களில் ஓர் அடிப்படை அம்சமாகும். இது சார்ந்துள்ள மக்கள்தொகை மற்றும் உழைக்கும் மக்கள் தொகைக்கும் உள்ள விகிதத்தை புரிந்து கொள்ளப்பயன்படுகிறது.
  • நாட்டின் மக்கள் தொகை வயதின் அடிப்படையின் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. இந்தியாவில் 15 வயதிற்கும் குறைவானவர்கள் 29.5 சதவீதமும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 8 சதவீதமும் உள்ளனர்.
  • ஆதலால் சார்ந்துள்ள மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 37.5 சதவீதமாக உள்ளது. மீதமுள்ள 62.5 சதவீதம் உழைக்கும் மக்கள் தொகையாக உள்ளது.

பாலின விகிதம்

  • பாலின விகிதம் என்பது மக்கள்தொகையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு உள்ள பெண்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும்.
  • ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்குமிடையேயான சமத்துவத்தின் அளவை அளவீடு செய்யும் சமூக குறியீடாக பாலின விகிதம் விளக்குகின்றது.
  • 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் பாலின விகிதம் 1000 ஆண்டுகளுக்கு 940 பெண்களாக உள்ளது. இது மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட குறைவாக இருப்பதைக் காட்டுகிறது.
  • கேரள மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மட்டும் பெண்கள் பாலின விகிதமானது 1000கும் அதிகமாக உள்ளது. கேரளாவில் 1084 பெண்களும், புதுச்சேரியில் 1038 பெண்களும் உள்ளனர். ஆனால் யூனியன் பிரதேசமான டையூ டாமனில் குறைந்த பாலின விகிதம் (618) பதிவாகியுள்ளது.

எழுத்தறிவு விகிதம்

  • மக்களில் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்களே எழுத்தறிவு பெற்றவர் ஆவார்கள். இது மக்களின் தரத்தை அறியும் முக்கிய அளவு கோலாகும்.
  • மொத்த மக்கள் தொகையில் எழுத்தறிவு பெற்ற மக்களின் எண்ணிக்கையே எழுத்தறிவு விகிதம் எனப்படும்.
  • இந்தியாவில் கல்வியறிவு வளர்ச்சியில் தொடர்ச்சியான முன்னேற்றம் காணப்படுகின்றது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்திய மக்கள் தொகையின் எழுத்தறிவு விகிதம் 74.04% ஆகும்.
  • இவற்றில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 82.14% ஆகவும் மற்றும் பெண்களின் எழுத்தறிவு விகிதம் 65.46% ஆகவும் உள்ளது. இது ஆண் மற்றும் பெண் எழுத்தறிவு விகிதத்தில் பெரும் வித்தியாசம் இருப்பதைக் காட்டுகிறது (16.68%).
  • கேரள மாநிலம் எழுத்தறிவில் 93.9% பெற்று இந்தியாவின் முதல் மாநிலமாகவும், இலட்சத்தீவுகள் 92.28% இரண்டாவதாகவும் உள்ளது. குறைந்த எழுத்தறிவு பெற்ற மாநிலமாக பீகார் (63.82%) உள்ளது.
  • பொருளாதாரச் செயல்பாடுகளில் ஈடுபடுவோர் மற்றும் பொருளாதாரச் செயல்பாடுகளில் ஈடுபடாதோருக்குமிடையேயான விகிதம் சார்ந்திருப்போர் விகிதம் எனப்படுகிறது.

தொழில்சார் கட்டமைப்பு

  • மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் பெறப்படும் தகவலின் அடிப்படையில் பொருளாதார நடவடிக்கையில் பங்கு பெறுபவர்களை தொழிலாளர்கள் என்கிறோம்.
  • தொழிலாளர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. அவை முதன்மை தொழிலாளர்கள், பகுதி நேர தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் அல்லாதோர்.
  • மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு ஆண்டின் பெரும்பகுதி நாட்களில் பணியாற்றுபவர்கள் முதன்மைத் தொழிலாளர்கள் எனப்படுவர் (குறைந்தபட்சம் வருடத்தில் 6 மாதம் அல்லது 183 நாட்கள்).
  • ஒரு ஆண்டில் 6 மாதங்களுக்குக் குறைவாக வேலை செய்பவர்கள் பகுதி நேரத் தொழிலாளர்கள் எனவும், வேலை செய்யாத மக்கள் தொழிலாளர் அல்லாதோர் ஆவார்.
  • வேலையில் பங்கேற்போர் விகிதம் மொத்த தொழிலாளர்களின் சதவீதத்தை குறிக்கிறது. அதாவது ஒரு பகுதியின் மக்கள் தொகையில் மொத்த முதன்மைத் தொழிலாளர்கள் மற்றும் பகுதி நேரத் தொழிலாளர்களின் சதவீதத்தைக் குறிக்கிறது.
  • 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வேலையில் பங்கேற்போர் விகிதம் 39.79% ஆகும். இவற்றில் ஆண்கள் 53.25 சதவீதமும், பெண்கள் 25.51 சதவீதமாகும்.
  • மொத்த தொழிலாளர்களில் முதன்மைத் தொழிலாளர்கள் 75.23 சதவீதமும் மீதமுள்ள 24.77 சதவீதத்தினர் பகுதி நேரத் தொழிலாளர்களாகவும் உள்ளனர்.

மக்கள் தொகை இயக்கவியல்

  • மக்கள் தொகை இயக்கவியல் என்பது மக்கள்தொகை அளவு மற்றும் அதன் பண்பு மாற்றங்கள் தொடர்பான காரணிகள் குறித்து கற்கும் ஒரு துறையாகும்.
  • எதிர்நோக்கும் மக்கள் தொகை மாற்றங்கள் பற்றி படிப்பது மக்கள் தொகை ஆய்வின் ஒரு முக்கிய அம்சமாகும்.
  • மக்கள் தொகையின் போக்கானது சமூக பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மீதான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மக்கட்தொகை அதிகரிப்பானது உயிர் பன்மை, காற்று, நிலம் மற்றும் நீர் வளங்களின் தரத்தைப் பாதிக்கிறது.
  • மக்கள் தொகையின் அளவு மற்றும் பண்புகள் தொடர்ந்து மாற்றங்களுக்கு உட்படுகின்றன. இந்த மாற்றங்கள் நாட்டின் மற்ற அனைத்து அம்சங்களிலும் தெளிவாக பிரதிபலிக்கின்றன.

அதிக மக்கள் தொகையால் ஏற்படும் பிரச்சனைகள்

  • இந்திய நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகையானது சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் மற்றும் சுற்றுச்சூழலில் பெரும் சவால்களை ஏற்படுத்த்துகின்றன.
  • மக்கள் தொகை பிரச்சனையானது இடம் மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. மக்கள் தொகை அதிகரிப்பால் மக்கள் நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, குறைந்த வாழ்க்கை தர, ஊட்டச்சத்தின்மை, இயற்கை மற்றும் வேளாண் வளங்களை தவறாக நிர்வகித்தல் ஆரோக்கியமற்ற சுற்றுச்சூழல் போன்ற பெரும் பிரச்சனைகள் ஏற்படுத்துகின்றன.

நகரமயமாக்கம்

  • கிராமப்புற சமுதாயம் நகர்புற சமுதாயமாக மாற்றமடைவதையே நகரமயமாக்கம் என்கிறோம்.
  • நகரமயமாக்கலின் நிலை என்பது நகரம் மற்றும் பெரும் நகரங்களில் உள்ள மக்கள் தொகை விகிதம் மற்றும் வேளாண் சாரா தொழிலார்களின் விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் அளவிடப்படுகிறது.
  • இவ்விரண்டும் தொழில்மயமாக்கம், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பொருளாதார விரிவாக்க செயல்பாடுகளுடன் நெருங்கிய தொடர்புடையதாக கருதப்படுகிறது.

இந்திய நகரமயமாக்கம்

  • நகர்புற மக்கள்தொகை சதவீதத்தின் அடிப்படையிலேயே நகரமயமாக்கம் அளவிடப்படுகிறது. இந்தியாவில் நகரமயமாக்கலின் நிலை 1901ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டிற்குள் மூன்று மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது.
  • நம் நாட்டில் 2001 ஆம் ஆண்டு 27.82 சதவீதமாக இருந்த நகர்ப்புற மக்கள் தொகை 2011ஆம் ஆண்டில் 31.16 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது பத்தாண்டுகளில் 3 சதவீதம் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
  • நகரமயமாக்கம் மாநிலங்களிடையே அதிகமாக வேறுபட்டு காணப்படுகிறது. இந்தியாவில் 62.17 சதவீத நகர்ப்புற மக்கள்தொகையுடன் கோவா மாநிலம் மிகுந்த நகர்மயமாக்கப்பட்ட பகுதியாக உள்ளது.
  • 10.04 சதவீத நகர்ப்புற மக்கள் தொகையுடன் இமாச்சல பிரதேசம் குறைந்த நகரமயமாக்கப்பட்ட பகுதியாக உள்ளது.
  • யூனியன் பிரதேசங்களுக்கிடையில் புதுடெல்லி (97.50%) மற்றும் சண்டிகர் (97.25%) மிகுந்த நகரமயமாக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன.
  • பெரிய மாநிலங்களுள் மிகுந்த நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடும் (48.4%) அதைத்தொடர்ந்து கேரளா (47.7%) மற்றும் மகாராஷ்டிராவும் (45.2%) உள்ளன.
வ.எண் நகரங்களின் வகைகள் / Urban Agglomerations / Out Growths 2001 ( எண்களில்) 2011 (எண்களில்)
1 சட்டப்பூர்வ நகரங்கள் 3799 4041
2 கணக்கெடுப்பு நகரங்கள் 1362 3894
3 நகர்க் குவியல்கள் 384 475
4 பூற வளர்ச்சி நகரங்கள் 962 981
ஆதாரம்: புள்ளியியல் விவரம் 2011
  • 2011ஆம் ஆண்டு மக்கள் தொகையின் கணக்கெடுப்பின்படி 7.935 நகரங்கள் (சட்டப்பூர்வ மற்றும் கணக்கெடுப்பு நகரங்கள்) உள்ளன. இது 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படியான 2774 லிருந்து அதிகரித்துள்ளதை காண்பிக்கின்றது.
  • 2001ஆம் ஆண்டு 384 ஆக இருந்த நகர குவியல்கள் மற்றும் 962 ஆக இருந்த புற வளர்ச்சிநகரங்கள், 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி முறையே 475 மற்றும் 981ஆக அதிகரித்துள்ளன.
  • மொத்தமுள்ள 468 UAs முதன்மை நகரபிரிவில், 53 நகரங்களில் மக்கள்தொகை ஒவ்வொன்றிலும் ஒரு மில்லியனுக்கும் மேல் உள்ளது. இந்நகரங்கள் ‘மில்லியன் நகரங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை நாட்டின் முக்கிய நகர்புற மையங்களாகும்.
  • மில்லியன் நகரங்களுக்கு இடையில் மூன்று நகரபுற குவியல்கள் தலா 10 மில்லியனுக்கும் மேலான மக்கள்தொகையுடன் “மெகா நகரங்கள்” என அழைக்கப்படுகின்றன. அவைகள் மும்பை (18.4 மில்லியன்), புதுடெல்லி (16.3 மில்லியன்) மற்றும் கொல்கத்தா(14.1 மில்லியன் )ஆகும்.

நகரமயமாக்களின் தாக்கங்கள்

  • நகரமயமாக்கலும் மக்கள் தொகை அடர்த்தியும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை.
  • நகர்ப்புறமாக்கலின் விரைவான வளர்ச்சியானது சமூக-பொருளாதார அபிவிருத்தியின் அடையாளமாக கருதப்படுகிறது.
  • இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நகர்ப்புறமயமாக்கம் விரைவாக அதிகரித்து வருகிறது. கிராமத்திலிருந்து நகரங்களுக்கு இடப்பெயர்தல் நகர்பகுதிகளில் மக்கள்தொகை வெடிப்பிற்கு வழிவகுக்கிறது.
  • மும்பை, கொல்கத்தா, புதுடெல்லி போன்ற பெருநகரங்கள் தங்கள் கொள்ளளவை விட அதிகமான மக்கள் தொகையுடன் காணப்படுகின்றன.
  • 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவின் நகர்புற மக்கள் தொகை 377 மில்லியன்களைக் கடந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது.
  • 2030ஆம் ஆண்டிற்குள் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் நகரமயமாக்கலால் ஏற்படும் பிரச்சனைகள்:

  • நகர விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • நகர்ப்புறங்களில் மக்கள் நெருக்கடியை தோற்றுவிக்கிறது.
  • நகர்புறங்களில் குடியிருப்புகளின் பற்றாக்குறையை உருவாக்குகிறது.
  • குடிசைப் பகுதிகள் தோன்ற காரணமாக உள்ளது.
  • போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்துகிறது.
  • குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றது.
  • வடிகால் பிரச்சனைகள் உண்டாகின்றன.
  • திடக்கழிவு மேலாண்மையை சிக்கலாகிறது.
  • குற்றங்கள் அதிகரிக்க காரணமாகின்றன.

மனிதவள மேம்பாடு

டாக்டர் கெகபூப்- உல்-ஹ்க் என்ற பொருளாதார நிபுணரின் கூற்றுப்படி, “மனிதவள மேம்பாடு என்பது கல்வி, உடல்நலம், வருமானம், அதிகாரம் போன்றவைகளில் மக்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் ஒரு செயல் முறையாகும். இது பௌதீக சூழலிலிருந்து பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சுதந்திரம் போன்றவைகளில் மனித விருப்ப வரம்புகளின் அதிகரிப்பதையும் உள்ளடக்கியதாகும்”.

மனிதவள வளர்ச்சி குறியீடுகள் (UNDP)

மக்கள் தொகை போக்குகள், ஆரோக்கிய வெளிப்பாடு, கல்விச் சாதனைகள், தேசிய வருமானம், வள-கூட்டமைப்பு, தொழில், வேலைவாய்ப்பு, மனித பாதுகாப்பு, மனித மற்றும் முதலீட்டு ஈர்ப்பு ஆகியன மனிதவள வளர்ச்சியின் குறியீடுகளாகும். நல்வாழ்வியல், உணர்வு மற்றும் அடிப்படை உரிமை ஒப்பந்தங்கள் ஆகிய மனித வள மேம்பாட்டு துணைக் குறியீடுகளாகும்.

மனிதவள மேம்பாட்டினை அளவிடுதல்

மனிதவள மேம்பாடு என்பது மூன்று அடிப்படை பரிமாணங்களைக் கொண்ட ஒரு கூட்டுக் குறியீடாகும்.

  1. ஆரோக்கியம் – பிறப்பு காலத்தில் – சராசரி வாழ்நாள் மதிப்பீடு
  2. கல்வி – பள்ளி செல்லும் குழந்தைகளின் படிப்பு காலம், வயது வந்தோர் சராசரியாக பள்ளிகளில் கற்கும் காலம்.
  3. வருமானம் – நிகர தேசிய வருமானம் மற்றும் தனிநபர் வருமானம்.

மனிதவள மேம்பாட்டு வகைப்பாடு

மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டு (HDI) வகைப்பாடு நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டு புள்ளிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இது கால்மான விளக்கப் பரவல் குறியீடுகளிலிருந்து பெறப்படுகிறது.

வகைப்பாடு

HDI 0.550 குறைந்த மனிதவளம் மேம்பாடு

HDI 0.550 – 0.699 மிதமான மனிதவள மேம்பாடு

HDI 0.700 – 0.799 அதிக மனிதவள மேம்பாடு மற்றும்

HDI 0.800 அதற்குமேல் மிக அதிக மனிதவள மேம்பாட்டைக் குறிக்கிறது.

போக்குவரத்து

  • போக்குவரத்து என்பது பயணிகள் மற்றும் சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதாகும். போக்குவரத்து அமைப்பு ஒரு நாட்டின் உயிர் நாடியாக கருதப்படுகிறது.
  • பண்டைய காலத்தில் மனிதன் கால்நடையாகவோ அல்லது விலங்குகளையோ போக்குவரத்திற்கு பயன்படுத்தி வந்தான். சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் போக்குவரத்து எளிமையாக்கப்பட்டது. மற்றும் படிப்படியாக பல்வேறுபட்ட போக்குவரத்து முறைகள் உருவாயின.

உலகின் பிரதான மூன்று போக்குவரத்து வகைகாள் பின்வருமாறு:

இந்தியாவின் போக்குவரத்து வகைப்பின்னல்

இந்தியா போன்ற பெரிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பில் மிகமுக்கியமான கூறுகளில் ஒன்று போக்குவரத்து ஆகும். ஒரு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே தேவையான இணைப்புகளை வழங்க சாலைகள், இரயில்வே வான்வெளி மற்றும் நீர்வழி போக்குவரத்துகள் அத்தியாவசியமாகின்றன.

சாலை வழி

  • சாலை வழி குறுகிய மற்றும் நீண்ட தூரத்திற்கு பயணிகள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறுகிய மத்திய மற்றும் தொலைதூர சேவைகளுக்கு பொருத்தமானதாக உள்ளது. இது குறுகிய தூர பயணத்திற்கு மிகவும் உகந்ததாகும்.
  • சாலைகளை அமைப்பது மற்றும் பராமரிப்பு செய்வது மற்ற போக்குவரத்து முறைகளை ஒப்பிடும்பொழுது மலிவானதாகும். சாலைப் போக்குவரத்து அமைப்பு மூலம் பண்ணைகள், தொழிற்சாலைகள் மற்றும் சந்தைகள் ஆகியவற்றிக்கிடையில் எளிதில் தொடர்பை ஏற்படுத்துகிறது.
  • இது சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களாலும் பயன்படுத்தக்கூடிய மலிவான போக்குவரத்தாகும்.
  • 2016 ஆம் ஆண்டின்படி இந்தியா சுமார் 56,03,293 கி.மீ நீளசாலைகளைக் கோண்டு உலகின் இரண்டாவது நீண்ட சாலைவலைப் பின்னல் அமைப்பைப் பெற்றுள்ளது.
  • இந்தியாவில் சுமார் 85 சதவீத பயணிகள், 75 சதவீத சரக்கு போக்குவரத்து சாலைகள் மூலம் மேற்கொள்கிறார்கள்.
  • சாலை அமைத்தல் மற்றும் பராமரிப்பு நோக்கத்திற்காக இந்திய சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகள் (NH), மாநில நெடுஞ்சாலைகள் (SH) மாவட்ட சாலைகள், கிராமப்புறச்சாலைகள், எல்லையோர சாலைகள் மற்றும் பன்னாட்டு நெடுஞ்சாலைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • ஷெர்சா சூரி தன்னுடைய பேரரசை பலப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் சாஹி (ராயல்) சாலையை சிந்து பள்ளத்தாக்கிலிருந்து மேற்கு வங்கத்தில் உள்ல சோனார் பள்ளத்தாக்கு வரை அமைத்தார். கொல்கத்தாவிலிருந்து பெஷாவர் வரை உள்ள இச்சாலை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கிராண்ட் ட்ரங்க்சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது இச்சாலை அமிர்தரசிலிருந்து கொல்கத்தாவரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இச்சாலை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது

(அ) NH1 டெல்லியிலிருந்து அமிர்தரஸ் வரை ஆ) NH2 டெல்லியிலிருந்து கொல்கத்தா வரை.

இந்திய சாலைகளின் வகைகள்

அ. தேசிய நெடுஞ்சாலைகள் (NH)

  • தேசிய நெடுஞ்சாலைகள் இந்திய சாலைப் போக்குவரத்தின் மிகமுக்கியமான அமைப்பாகும். இத்தேசிய நெடுஞ்சாலைகள் வடக்கு – தெற்கு, கிழக்கு – மேற்காக நாட்டின் எல்லைகளையும், மாநிலங்களின் தலைநகரங்கள், முக்கியத் துறைமுகங்கள், இரயில் நிலையங்கள், முக்கிய சுற்றுலா மையங்கள், தொழில் மையங்கள் ஆகியவற்றை இணைக்கின்றன.
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் இந்திய அரசின் தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பொறுப்பாகும்.
  • 2016ஆம் ஆண்டின்படி மொத்த தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் சுமார் 1,01,011 கி.மீ ஆகும். இது 20160இன்படி மொத்த சாலைப் போக்குவரத்து வலைப்பின்னலில் 1.8 சதவீதமாகும்.
  • இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை NH7 ஆகும். இது உத்திரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசியிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி வரை 2369 கி.மீ நீளத்தைக் கொண்டதாகும்.
  • குறைவான நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை NH 47 A ஆகும். இது எர்ணாக்குளத்திலிருந்து 6 கி.மீ தொலைவைக் கொண்ட கொச்சின் துறைமுகத்தை (வில்லிங்டன் தீவு) இணைக்கிறது.

ஆ. எல்லைப்புறச் சாலைகள்

மாநில நெடுஞ்சாலைகள் பொதுவாக மாநிலத்திலுள்ள முக்கிய மாநகரங்கள், நகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களை, மாநில தலைநகரத்துடனும் தேசிய நெடுஞ்சாலைகளுடனும் அண்டை மாநில நெடுஞ்சாலைகளுடனும் இணைக்கின்றன. இந்தச் சாலைகள் மாநில பொதுப்பணித்துறையினால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. 2016-ன் படி மாநில நெடுஞ்சாலைகளின் நீளம் 1,76,166 கி.மீ ஆகும்.

இ. மாவட்டச் சாலைகள்

மாவட்டச் சாலைகளானது மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் மாவட்ட மற்றும் வட்டார தலைமை இடங்களை இணைக்கிறது. மாவட்ட சாலைகள் மாநிலத்தின் பொதுப் பணித்துறையால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. 2016-ன்படி இந்தியாவில் மாவட்டச் சாலைகளின் நீளம் 5,61,940 கி.மீ (16.81%) ஆகும்.

ஈ. ஊரகப் பகுதி சாலைகள் (கிராமச் சாலைகள்)

கிராமப்புறச் சாலைகளின் இணைப்பு கிராமப்புற வளர்ச்சியின் ஒரு முக்கிய கூறாகும். இச்சாலைகள் கிராமப்புறங்களை இணைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது. இது பல்வேறு கிராமங்களை அதன் அருகில் உள்ள நகரங்களுடன் இணைக்கிறது. இவைகளை கிராம பஞ்சாயத்துகளால் பராமரிக்கப்படுகின்றன. 2016ஆம் ஆண்டின்படி இந்தியாவில் கிராமப்புற சாலைகளின் மொத்த நீளம் 39,35,337 கி.மீ. ஆகும். கிராமப்புறச் சாலைகளானது, பஞ்சாயத்து சாலைகள், (பஞ்சாயத்து , சமிதி, ஜில்லா-பரிஷித் மற்றும் கிராம பஞ்சாயத்து) பிரதம மந்திரியின் பிரதான கிரமப்புற சாலைகள் திட்டம் மற்றும் மாநிலப் பொதுப்பணித் துறையினரால் அமைக்கப்படும் சாலைகள் ஆகியவைகளைக் கொண்டதாகும்.

  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 1995 இல் நிறுவப்பட்டது. இது தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.

உ. எல்லைப்புறச் சாலைகள்

  • எல்லைப்புறச் சாலைகள் நாட்டின் எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாலை வகைகளாகும். இவைகள் எல்லைப்புறச் சாலைகள் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வமைப்பு 1960-இல் நிறுவப்பட்டது.
  • இச்சாலைகள் வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எல்லைப்புறச் சாலை நிறுவனம் உலகிலேயே உயரமான எல்லைப்புறச் சாலையை லடாக்கில் உள்ள லேவில்ச் இருந்து சண்டிகர் வரை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 4,270 மீட்டர் உயரத்தில் உள்ளது.

தங்க நாற்கரச் சாலைகள்

இது 5,846 கி.மீ. நீளத்தையும் 4 முதக் 6 வழிகளைக் கொண்டதாகவும் உள்ளது. இது வடக்கு தெற்காக இந்தியாவின் நான்கு பெரு நகரங்களான புதுடெல்லி – கொல்கத்தா – சென்னை – மும்பை – புதுடெல்லி ஆகியவைகளை இணைக்கிறது. இத்திட்டம் 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

வட – தென் மற்றும் கிழக்கு – மேற்கு பகுதிகளை இணைக்கும் சாலைகள்

  • வட -தென் பகுதிகளை இணைக்கும் சாலைகளின் நோக்கம் ஜம்மு – காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரையும் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரியையும் 4,076 கி.மீ நீளத்தைக் கொண்ட சாலை மூலம் இணைப்பதாகும்.
  • (கொச்சின், சேலம் உட்பட) கிழக்கு – மேற்கு பகுதிகளை இணைக்கும் சாலைகள் அசாம் மாநிலத்தில் சில்சரையும் குஜராத்தில் உள்ள துறைமுக நகரான போர்பந்தரையும் இணைக்கும் வகையில் 3,640 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சாலைகளும் ஜான்சியில் சந்திக்கின்றன.

ஊ. விரைவுச் சாலைகள்

விரைவுச் சாலைகள் என்பன நன்கு மேம்படுத்தப்பட்ட தரமான பல்வழிப் பாதைகளைக் கொண்ட அதிவேக போக்குவரத்திற்கான சாலைகள் ஆகும்.

முக்கியமான சில விரைவுச் சாலைகள்

  1. மும்பை – பூனா விரைவுச் சாலை
  2. கொல்கத்தா – டம்டம் விமான நிலைய விரைவுச்சாலை
  3. துர்காப்பூர் – கொல்கத்தா விரைவுச்சாலை
  4. புதுடெல்லி மற்றும் ஆக்ரா இடையேயான யமுனா விரைவுச்சாலை.

எ. பன்னாட்டு நெடுஞ்சாலைகள்

  • இந்தியாவை அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள சாலைகள் பன்னாட்டு நெடுஞ்சாலைகள் ஆகும்.
  • இச்சாலைகள் ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (ESCHP) உடன்படிக்கையின் கீழ் உலக வங்கி நிதியுதவியின்மூலம் அமைக்கப்பட்டுள்ளன.
  • இச்சாலைகள் பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய அண்டை நாடுகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கின்றன.
  • இந்தியாவில் சாலைகள் அமைப்பதற்கு மிக எளிதாக இருக்கும் வடஇந்திய பெரும் சமவெளிகளில் அடர்த்தியான சாலை அமைப்பு காணப்படுகிறது.
  • மலைப்பாங்கான பகுதிகளில் சாலைகள் அமைக்க கடினமாக உள்ளது. கேரளாவில் சாலைகளின் அடர்த்தி மிக அதிகமாகவும் ஜம்மு – காஷ்மீரில் மிகக் குறைவாகவும் உள்ளது.

இரயில் போக்குவரத்து

  • இந்திய இரயில்வே அமைப்பு நாட்டினுடைய உள்நாட்டு போக்குவரத்திற்கான முக்கிய உயிர் நாடியாக அமைந்துள்ளது. மிக அதிக அளவிலான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பை இரயில்வே அளித்துவருகிறது.
  • மேலும் இந்திய தரைவழிப் போக்குவரத்து அமைப்பின் முதுகெலும்பாக கருதப்படுகிறது. இது மக்களை ஒன்றிணைப்பதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கிறது.
  • வணிகம், சுற்றுலா, கல்வி போன்றவற்றையும் ஊக்குவிக்கிறது. வேளாண்மைதுறையில் எளிதில் அழுகக்கூடிய பொருட்களை வர்த்தகம் செய்ய விரைவான போக்குவரத்தை அளித்து உதவி புரிகிறது.
  • மூலப்பொருட்களைத் தொழிற்சாலைக்கும் தயாரிக்கப்பட்ட தொழிலக பொருட்களைச் சந்தைகளுக்கும் கொண்டு செல்லும் இரயில்வேயின் பணி மதிப்பிட முடியாத ஒன்று.
  • இந்தியா இரயில் போக்குவரத்து அமைப்பு ஆசியாவில் மிகப் பெரியதும் உலக அளவில் இரண்டாவது பெரியதும் ஆகும்.
  • 2017ஆம் ஆட்ய் கணக்கெடுப்பின்படி இந்திய இரயில் பாதையின் மொத்த நீளம் 67,368 கி.மீ ஆகும். இவ்வமைப்பு 7,349 இரயில் நிலையங்களை உள்ளடக்கியது.
  • இரயில்களின் இயக்கம் மற்றும் மேலாண்மைக்காக, இந்திய இரயில்வே துறை 16 இரயில்வே மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை
வ.எண் மண்டலங்கள் தலைமையிடம்
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

வடக்கு இரயில்வே

வடமேற்கு இரயில்வே

வடமத்திய இரயில்வே

வடகிழக்கு இரயில்வே

வடகிழக்கு எல்லை இரயில்வே

கிழக்கு இரயில்வே

கிழக்கு கடற்கரை இரயில்வே

கிழக்கு மத்திய இரயில்வே

மேற்கு மத்திய இரயில்வே

மத்திய இரயில்வே

மேற்கு இரயில்வே

தெற்கு இரயில்வே

தென்மத்திய இரயில்வே

தென்கிழக்கு இரயில்வே

தென்மேற்கு இரயில்வே

தென்கிழக்கு மத்திய இரயில்வே

கொங்கன் இரயில்வே

புதுடெல்லி

ஜெய்ப்பூர்

அலகாபாத்

கொரக்பூர்

கௌகாத்தி

கொல்கத்தா

புவனேஸ்வர்

ஹசிப்பூர்

ஜபல்பூர்

மும்பை (சத்ரபதி சிவாஜி முனையம்)

மும்பை (சர்ச்கேட்)

சென்னை

செகந்தராபாத்

கொல்கத்தா

ஹுப்ளி

பிலாஸ்பூர்

நவி மும்பை

  • வட இந்திய இரயில்வே மிக நீண்ட இரயில்பாதையையுடையது. அதற்கு அடுத்தாற் போல் மேற்கித்திய இரயில்வே நீளமான இரயில் பாதையைக் கொண்டுள்ளது.
  • இந்திய இரயில்வே துறை இருப்புப்பாதையின் அகலத்தை அடிப்படையாகக் கொண்டு நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை

1. அகலப்பாதை (1.676 மீ அகலம்)

2. மீட்டர் பாதை (1.00 மீ அகலம்)

3. குறுகிய பாதை (0.762 மீ அகலம்)

4. குறுகிய தூக்குப்பாதை (0.610 அகலம்) ஆகியவையாகும்.

  • சமீப காலங்களில் இந்திய இரயில்வே துறையில் பல வளர்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொங்கன் இரயில் நிறுவனம் விரைவான போக்குவரத்து அமைப்பு, மெட்ரோ மற்றும் புறந்கர் இரயில் போக்குவரத்து வசதியை வழங்குகிறது.
  • இவை நகர்புறங்களில் உள்ள போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க மிகவும் உதவியாக உள்ளது.

  • இந்தியாவின் முதல் இரயில் போக்குவரத்து மும்பை மற்றும் தானே நகரங்களுக்கிடையேயான 34 கி.மீ தூரத்திற்கு 1853-இல் தொடங்கப்பட்டது. 1952-இல் இரயில்வேயானது ‘இந்தியன் இரயில்வே’ என்ற பெயருடன் தேசிய மயமாக்கப்பட்டது. இந்தியன் இரயில்வேயின் தலைமையகம் புதுடெல்லியாகும்.
  • இந்தியாவின் முதல் புறநகர் இரயில் போக்குவரத்து மும்பையில் 1925-இல் தொடங்கப்பட்டது. சென்னை நகரம் மெட்ரோ இரயில் சேவை கொண்ட ஆறாவது நகரமாகும். காத்திமன் (GATHIMAN) அதிவிரைவு வண்டி இந்தியாவின் மிக அதிகவேக இரயில்வண்டி ஆகும். இந்த இரயில்வண்டி புதுடெல்லியையும் ஆக்ராவையும் இணைக்கிறது. இது கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து மேற்கூறிய இரு நகரங்களுக்கிடையேயான 200 கி.மீ தொலைவை 105 நிமிடங்களில் கடக்கிறது.

அ. கொங்கன் இரயில்வே

  • இரயில்வே துறையின் முக்கிய சாதனைகளில் ஒன்றான கொங்கன் இரயில்வே 1998 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இது மகாராஷ்ட்டிராவில் உள்ல ரோகாவிற்கும் கர்நாடகாவில் உள்ள மங்களூருக்கும் இடைப்பட்ட 760 கி.மீ நீளத்தை இணைக்கிறது.
  • கொங்கன் இரயில்வே பொறியியல் துறையின் அதிசயமாக கருதப்படுகிறது. இந்த இரயில்வே அதன் பாதையில் 146 ஆறுகள் மற்றும் சிற்றோடைகளையும் சுமார் 2000 பாலங்களையும் 73 சுரங்கப் பாதைகளையும் கடந்து செல்கிறது.
  • ஆசியாவின் மிக நீளமான 6.44 கி.மீ நீளம் கொண்ட சுரங்கப்பாதை இவ்வழியில் அமைந்துள்ளது. மகாராஷ்ட்டிரா , கோவா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் கூட்டு முயற்சியில் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
  • காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குவாசிகண்ட் மற்றும் ஜம்மு பகுதியில் உள்ள பானிஹால் இடையேயான் இரயில் இருப்புப்பாதை 2013 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
  • இந்த இரயில்பாதை பீர்பாஞ்சல் மலைத்தொடர் வழியே 11.2 கி.மீ நீண்ட சுரங்கப்பாதையை கடந்து செல்கிறது.

ஆ. இந்திய மெட்ரோ இரயில் போக்குவரத்து

  • இந்தியாவில் 8 பெரு நகரங்களில் மெட்ரோ இரயில்சேவை வழக்கப்படுகிறது. அவைகள் கொல்கத்தா (மேற்கு வங்கம்) , சென்னை (தமிழ்நாடு), புதுடெல்லி, பெங்களூர் (கர்நாடகா), குர்கயோன் (ஹரியானா), மும்பை (மகாராஷ்ட்ரா) , ஜெய்ப்பூர் (இராஜஸ்தான்) மற்றும் கொச்சி (கேரளா) ஆகும். இந்தியாவில் இந்த இரயில் சேவை முதன்முதலில் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது.
  • இது அதிக மக்களை விரைவாக ஏற்றிச் செல்லும் அமைப்பாகக் கருதப்படுகிறது (MRTS) செப்டம்பர் 2018-இன்படி இந்தியாவில் 507 கி.மீ. நீள மெட்ரோ இருப்புப் பாதைகள் 381 இரயில் நிலையங்களுடன் இயங்கிவருகிறது.
  • மேகாலயா மாநிலத்தில் இரயில் போக்குவரத்து இல்லை.

குழாய் வழிபோக்குவரத்து

  • எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்களையும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் அதன் சந்தை பகுதிகளோடு இணைப்பதற்கு எளிதான மற்றும் சிறந்த போக்குவரத்தாக குழாய் போக்குவரத்து செயல்பட்டு வருகிறது.
  • இவை நகரங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது. தற்பொழுது திடப் பொருள்களும் குழம்பாக்குதல் மூலம் குழாய் வழியே கொண்டு செல்லப்படுகிறது.
  • குழாய் போக்குவரத்து அமைப்பதற்கு ஆரம்பக்கால செலவுகள் ஆகும். ஆனால் பின்னர் இதனை பராமரிப்பதற்கான செலவு மிகவும் குறைவு. இவற்றை கடினமான நிலப்பகுதிகளிலும், நீருக்கு அடியிலும் அமைக்க இயலும்.
  • இது தடங்கலற்ற, குறைந்த செலவுடைய, காலதாமதமற்ற மற்றும் ஆவியாதல் மூலம் ஏற்படும் இழப்பின்மை போன்றவற்றை உறுதி செய்கிறது.
  • மேல் அசாமில் உள்ள எண்ணெய் வயலில் இருந்து கான்பூர் வரையிலும், குஜராத்தில் உள்ள சலாயா பகுதியிலிருந்து, பஞ்சாபிலுள்ள ஜலந்தர் வரையிலும் , குஜராத்தில் உள்ள ஹஜிராவிலிருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜெகதீஷ்பூர் வரை செல்லும் குழாய் போக்குவரத்துகள் இந்தியாவின் முக்கிய குழாய் போக்குவரத்து அமைப்புகளாகும்.

நீர்வழிப்போக்குவரத்து

  • நீர்வழிப் போக்குவரத்து இந்தியாவில் பயணிகள் மற்றும் சரக்குகள் போக்குவரத்திற்கு முக்கியமான ஒன்றாகும். இது பழமையான மற்றும் மலிவான ஒரு போக்குவரத்து முறையாகும்.
  • கனமான மற்றும் அதிக அளவிலான சரக்குகளை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு எடுத்துச் செல்ல மிகவும் ஏற்றது நீர்வழிப்போக்குவரத்தாகும்.
  • இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் குறைந்த எரிபொருள் செலவின போக்குவரத்து முறையாகும். நீர்வழிப் போக்குவரத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை

1. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து

2. கடல் வழிப்போக்குவரத்து

1. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து

  • இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆறுகள் கால்வாய்கள் ஏரிகள் மற்றும் காயல்களைக் கொண்ட மிகப்பெரிய வலைப்பின்னல் அமைப்புடன் நடைபெற்றுவருகிறது.
  • நீர்வழிப் போக்குவரத்து நீரின் ஆழம், அகலம் மற்றும் தொடர் நீரோட்டத்தைப் பொறுத்து அமைகிறது. நம் நாட்டில் நீர்வழிப்போக்குவரத்திற்கு 14,500 கி.மீ தொலைவு ஏதுவாக உள்ளது.
  • இதில் 5,200 கி.மீ நீளம் ஆறுகள் மூலமும் 4000 கி.மீ. நீளம் கால்வாய்கள் மூலமும் இயந்திர படகுகளைக் கொண்டு நடைபெறுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு டரக்கு கையாளுதலில் சுமார் 0.1% இதன் பங்களிப்பாகும்.
  • உள்நாட்டு போக்குவரத்து வளர்ச்சி, பராமரிப்பு மற்றும் ஒழுங்குபடுத்துவதற்காக 1986 –இல் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து ஆணையம் தொடங்கப்பட்டது.

இந்தியாவின் முக்கிய தேசிய நீர்வழிப் போக்குவரத்துகள்

1. தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண்.1:

இது ஹால்தியா மற்றும் அலகாபாத் இடையே 1620 கி.மீ நீளத்தை கொண்டு, கங்கை –பாகிரதி – ஹூக்ளி ஆறுகளுடன் இணைந்து செயல்படுகிறது.

2. தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண்.2

இது பிரம்மபுத்ரா ஆற்றில் துபிரி மற்றும் காடியாவிற்கு இடையே சுமார் 891 கி.மீ. நீளத்தைக் கொண்டுள்ளது.

3. தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண்.3

இந்த நீர்வழி கேரளா மாநிலத்தின் கொல்லம் மற்றும் கோட்டபுரம் இடையே உள்ளது. 4 மணி நேரமும் செயல்பட்டு 205 கி.மீ தொலைவிற்கு போக்குவரத்து வசதியை அளிக்கக்கூடிய இந்தியாவின் முதல் தேசிய நீர்வழிப் போக்குவரத்து இதுவாகும்.

2. கடல் வழிப்போக்குவரத்து

  • கடல்வழி போக்குவரத்து இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கை வகிக்கிறது. இந்திய வெளிநாட்டு வர்த்தகத்தில் சுமார் 95 சதவீத அளவுக்கு 70 சதவீத மதிப்புள்ள சரக்குகள் கடல்வழிப்போக்குவரத்து மூலமாக நடைபெறுகிறது.
  • இந்தியாவின் கனரக பொருட்கள் மற்றும் அதிக அளவிலான சரக்குகளை கையாளுவதில் கப்பல் போக்குவரத்து முக்கிய பங்காற்றுகிறது. இது மிகவும் சிக்கனமான போக்குவரத்து மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கும் ஏற்ற ஒன்றாகும்.
  • கடல் மற்றும் பெருங்கடல் வழிகள் பெரும்பாலும் சர்வதேச வணிகத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. இவ்வழிகள் துறைமுகங்கள் மூலம் இணைக்கப்படுகின்றன.
  • இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்களும் , 200 நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்களும் உள்ளன.
  • பெரிய துறைமுகங்களை மத்திய அரசாங்கமும் சிறிய மற்றும் நடுத்தர துறைமுகங்களை அந்தந்த மாநில அரசுகளும் நிர்வாகம் செய்கின்றன.
  • கிழக்கு இந்திய கடற்கரையில் அமைந்துள்ல முக்கிய துறைமுகங்கள் கொல்கத்தா, ஹால்தியா, பாராதீப், விசாகப்பட்டினம், சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகும்.
  • மேற்கு இந்திய கடற்கரையில் அமைந்துள்ள முக்கிய துறைமுகங்கள் காண்டலா, மும்பை, நவசேவா (ஜவஹர்லால் நேரு துறைமுகம்), மர்மகோவா, நியூமங்களூரு மற்றும் கொச்சின் ஆகும்.

இந்தியாவில் நான்கு முக்கிய கப்பல் கட்டும் தளங்கள்

  1. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் – விசாகப்பட்டினம்
  2. கார்டன் ரீச் கப்பல் கட்டும் தொழிற்சாலை – கொல்கத்தா
  3. மசாகான் கப்பல் கட்டும் தொழிற்சாலை – மும்பை
  4. சொச்சி கப்பல் கட்டும் தளம் – கொச்சி

இந்தியா கப்பல் கட்டும் தொழிலில் ஆசியாவில் இரண்டாவது இடத்தையும் உலக அளவில் 16வது இடத்தையும் பெற்றுள்ளது.

வான்வழி போக்குவரத்து

  • வான்வழிப் போக்குவரத்து விரைவான, பயணசெலவு மிகுந்த, நவீன மற்றும் வசதியான போக்குவரத்தாகும். விமான போக்குவரத்து தேசிய, பிராந்திய, மற்றும் சர்வதேச அளவிலான இணைப்பு வசதியை வழங்குகிறது.
  • உயர்ந்த மலைகள், பாலைவனங்கள் மற்றும் அடர்ந்த காடுகள் மற்றும் கடினமான நிலப்பரப்புகள் போன்ற பகுதிகளை எளிதில் இணைக்கவல்லது.
  • இப்போக்குவரத்து, பயணிகள், சரக்குகள், அஞ்சல்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்கின்றன. அவசரகால நேரங்கள், இயற்கை மற்றும் செயற்கை பேரிடர்களான வெள்ளம், பஞ்சம், தொற்றுநோய்கள், போர்கள் போன்ற நிகழ்வுகளின்போதும் வான்வழிப்போக்குவரத்து முக்கிய பங்காற்றுகிறது.
  • முதல் இந்திய விமானப் போக்குவரத்து பிப்ரவரி 1918-இல்ஹென்றி பிக்யூர் என்பவரால் அலகாபாத்திலிருந்து நைனிக் என்ற இடத்திற்கு கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டதன் மூலம் ஆரம்பமானது.
  • 1953ஆம் ஆண்டு நாட்டில் செயல்பட்டு வந்த 8 பல்வேறு விமான நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அலைகள் தேசியமயமாக்கப்பட்டன.
  • உள்நாட்டு வான் வழிப்போக்குவரத்து ஒரு நாட்டினுடைய எல்லைக்குள்ளும் சர்வதேச வான்வழிப்போக்குவரத்து உலகின் முக்கிய நகரங்களையும் இணைக்கிறது.
  • இந்திய அரசாங்கம் இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா என்ற இரண்டு விமான சேவைகளை வழங்குகிறது.
  • இந்தியன் ஏர்லைன்ஸ் உள்நாட்டு போக்குவரத்து சேவையையும் வழங்குகின்றன.
  • இந்தியாவில் தற்பொழுது 19 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இந்த விமான நிலையங்களின் நிர்வாக பொறுப்பினை இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் கவனித்து வருகிறது.
  • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் – கொல்கத்தா, சென்னை சர்வதேச விமானநிலையம் –சென்னை, இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் – புதுடெல்லி, சத்ரபதி சிவாஜி விமானநிலையம் – மும்பை, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் – திருவனந்தபுரம், சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் – அகமதாபாத், பெங்களூரு சர்வதேச விமான நிலையம் பெங்களூரு, ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையம் – ஐதராபாத் போன்றவை முக்கியமான விமான நிலையங்கள் ஆகும். இவற்றைத் தவிர சுமார் 80 உள்நாட்டு விமான நிலையங்களும் பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள 25 சிவில் விமான நிலையங்களும் விமான சேவையை வழங்குகின்றன.

பவன் – ஹான்ஸ் வானுலங்கு ஊர்தி (ஹெலிகாப்டர்) நிறுவனம்

  • பவன் ஹான்ஸ் வானுலங்கு ஊர்தி நிறுவனம் (ஹெலிகாப்டர்) பெட்ரோலிய நிறுவனங்களான ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் மற்றும் கடல்சார்ந்த பணிகளுக்கும் வானுலங்கு சேவையை அளிக்கிறது.
  • இது புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்ட பொதுத்துறை நிறுவனமாகும். இது மும்பையின் மேற்கு வில்பார்லேவில் உள்ள ஜுகு விமான நிலையத்தைத் தளமாகக் கொண்டு இயங்குகிறது.
  • பவன் ஹான்ஸ் நிறுவனம் ஒரு மினி- ரத்னா-I பிரிவின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் பல்வேறு இந்திய மாநில அரசுகளுக்கு குறிப்பாக வட கிழக்கு இந்திய மாநிலங்களுக்கு இடையில் உள்ள தீவுகளுக்குச் சேவையை அளிக்கிறது.
  • இது அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கும் இலட்சத்தீவுகளுக்கும் பயணப் படகுச் சேவையையும் வழங்குகிறது.

இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் (AAI)

இந்திய விமான நிலையப் பொறுப்பு ஆணையம் 1995-ல் ஆரம்பிக்கப்பட்டது. இது இந்திய விமான நிலையங்களுக்கு பாதுகாப்பை அளிக்கிறது. இந்திய குடிமை விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம், பராமரித்தல், மேம்படுத்துதல் மற்றும் நிர்வாகம் ஆகிய பணிகளை மேற்கொள்கிறது.

  • 2007ஆம் ஆண்டு இந்திய அரசால் ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இந்திய தேசிய விமானப் போக்குவரத்து கழகத்தின் (NACIK) கீழ் ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் NACIK (அ) சர்வதேச விமான சேவையையும் NACIL (I) உள்நாட்டு மற்றும் அண்டைப் பகுதியில் உள்ள தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சேவைகளையும் அளிக்கிறது.

தகவல் தொடர்பு

தகவல்கள், எண்ணங்கள் மற்றும் கருத்துக்களின் பரிமாற்றத்தையே தகவல் தொடர்பு என்கிறோம். தகவல் தொடர்பு துறையில் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வகையில் உள்ளது.

தகவல் தொடர்புகள் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

1. தனிமனித தகவல் தொடர்பு

2. பொதுத்தகவல் தொடர்பு

தனிமனித தகவல் தொடர்பு

  • தனி நபர்களுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் தனிமனித தகவல் தொடர்பு என அழைக்கப்படுகிறது. இது அஞ்சல் சேவை, தந்தி, தொலைபேசி குறுந்தகவல் பிரதிகள், இணையதளம் மற்றும் மின் அஞ்சல் போன்றவைகளை உள்ளடக்கியது.
  • தனி மனித தகவல் தொடர்பு அமைப்பு பயனாளர்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துகிறது.
  • உலக அளவில் மிகப்பெரிய வலைப்பின்னல் அமைப்பு கொண்ட இந்திய அஞ்சல் துறை 1,55,000 அஞ்சல் நிலையங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் 1,39,000-ற்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் கிராமப் புறங்களில் அமைந்துள்ளன.
  • இந்திய அஞ்சல் சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 1857ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • இந்தியாவின் முதல் அஞ்சல் வில்லை 1852ஆம் ஆண்டு கராச்சியில் வெளியிடப்பட்டது. அஞ்சல்களை சேகரித்தல் மற்றும் விநியோகம்செய்வது இந்திய அஞ்சல் துறையின் முக்கிய பணியாகும்.
  • இத்துறை விரைவு அஞ்சல் சேவையை 1975-இல் அறிமுகம் செய்தது. இன்று நாடு முழுவதும் இச்சேவை விரிவடைந்து காணப்படுகிறது. 1972ஆ,ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சல் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு விரைவு தபால் சேவை செயல்படுகிறது.
  • பண அஞ்சல், மின்னணு பண அஞ்சல், விரைவு தபால், விரைவு சிப்பஅஞ்சல், வணிக அஞ்சல், ஊடக அஞ்சல் செயற்கைக்கோள் வழி அஞ்சல், சில்லறை அஞ்சல் , வாழ்த்து அட்டைகள், தகவல் அஞ்சல், துரித சேவை மற்றும் விரைவான கடவுச்சீட்டு சேவைகளை அஞ்சல்துறை வழங்கி வருகிறது.
  • முதல் வகுப்பு அஞ்சலாக உள்ள அஞ்டல் அட்டைகள் மற்றும் அஞ்சல் உரைகளை வான்வழி மற்றும் நிலவழி மூலமாக பல்வேறு இடங்களுக்கு இச்சேவை மூலம் கொண்டுச்செல்லப்படுகிறது.
  • இரண்டாம் வகுப்பு அஞ்சல் பிரிவில் உள்ள புத்தக கட்டுகள் பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள் மற்றும் பருவஇதழ்கள், தரைவழி, கடல்வழி மற்றும் ஆகாய வழி அஞ்சல்கள் மூல பரிமாற்றம் செய்யப்படுகிறது.
  • மாநகரங்கள் மற்றும் நகரங்களில் விரைவு அஞ்சல் சேவைக்காக ஆறு அஞ்சலக தடங்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவைகள்

1. ராஜதானி தடம் 2. மெட்ரோ தடம்

3. பசுமைத்தடம் 4. வணிகத் தடம்

5. மொத்த அஞ்சல் தடம் மற்றும் 6. பருவ இதழ் தடம் ஆகும்.

  • ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைதொடர்பு வலைப்பின்னல் அமைப்பை கொண்டுள்ள நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. நகர்ப்புற பகுதிகள் மட்டும் அல்லாமல் கிராமப்புறப் பகுதிகளிலும் STD (உள்நாட்டு சந்தாதார் அழைப்பு) தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது.
  • வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொடர்பு கொள்ள ISD முறை (சர்வதேச சந்தாதாரர் அழைப்பு) பயன்படுத்தப்படுகிறது.
  • உள்நாட்டு சந்தாதாரர் அழைப்பிற்கு நாடு முழுவதும் ஒரு சீரான அழைப்பு கட்டணமுறை நடைமுறையில் உள்ளது.
  • தொலைபேசி என்பது வாய்மொழி தகவல்பரிமாற்ற முறையாகும். வணிக வளர்ச்சிக்கு இது மிகவும் உதவிக்கரமாக உள்ளது. இது உடனடி தகவல் தொடர்பை வழங்குவதால் மக்களால் முன்னுரிமை அளிக்கப்படும் துறையாக விளங்குகிறது.
  • கைபேசி , பிரதி அஞ்சல் மற்றும் இணையதளம் போன்றவை நாட்டில் பயன்படுத்தப்படும் மற்ற தனி மனித தகவல் தொடர்பு சாதனங்களாகும்.

பொதுத் தகவல் தொடர்பு அமைப்பு

பொது தகவல் தொடர்பு என்பது ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் தகவல்களை பெறுவதாகும்,. இது கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் சிறந்தவழியாகும். பல்வேறு தேசியக் கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கப் பொது தகவல் தொடர்பு பயன்படுகிறது. பொது தகவல் தொடர்பு அமைப்பானது அச்சு ஊடகக்கள் மற்றும் மின்னணு ஊடகங்கள் என்னும் இரண்டு முறைகளில் மக்களுக்கு தகவல்களை வழங்குகிறது.

மின்னணு ஊடகங்கள்

  • இந்திய வானொலி ஒளிபரப்பு சேவை, மும்பை வானொலி சங்கம் மூலமாக 1923ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து மக்களின் சமூக கலாச்சார வாழ்க்கை முறை மாற்றங்களுக்கு காரணமாக விளங்கி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்லது.
  • ஒது 1936-ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி என்றும் 1957ஆம் ஆண்டு முதல் “ஆகாச வாணி” எனவும் பெயர் மாற்றம் செய்து அழைக்கப்பட்டு வருகிறது.
  • இது கல்வி, செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.
  • சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகள் மற்றும் சிறப்பு விழாக்கள் தொடர்பான நிகழ்வுகளையும் சிறப்பு செய்திகளாக ஒளிபரப்புகிறது.

தொலைக்காட்சி

தொலைக்காட்சி ஒளிபரப்பு ஊடகம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள பல்வேறு தகவல்களை ஒளி – ஒலி காட்சி மூலமாக வழங்கும் சிறந்த ஊடகமாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் தொலைக்காட்சி வலையமைப்பு “தூர்தர்ஷன்” என அழைக்கப்படுகிறது. இது பொதுவான தேசிய திட்ட சேவைகளை வழங்க தொடங்கிய பின்பு இச்சேவை பின்தங்கிய மற்றும் தொலைதூர கிராமப்புறங்களுக்கு விரிவடைய செய்யப்பட்டது.

இணையம்

  • இணையம் என்பது வலையமைப்பு நெறிமுறைகளை பயன்படுத்தும் கணினி மூலம் இணைக்கப்பட்ட உலகளாவிய ஒரு தகவல் பரிமாற்ற வலையமைப்பு ஆகும்.
  • உருவாக்கம், எண்ணங்கள், வேலைவாய்ப்பு மற்றும் இதர செய்திகளை நேரடியாக பகிர்ந்துகொள்ள பயன்படும் ஒரு சமூக ஊடகமாகவும் பயன்படுகிறது. இணைய பயன்பாட்டில் சீனாவிற்கு அடுத்தபடியாக 460 மில்லியன் இஅனைய பயன்பாட்டாளர்களை கொண்டு இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் 635.8 மில்லியன் மக்கள் இணையத்தை பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் இணைய பயன்பாட்டாளர்களை அதிகம் இருப்பினும் 2015ஆம் ஆண்டின் படி 26 சதவீத மக்கள் மட்டுமே இணைய வசதியை பெற்றவர்களாக உள்ளனர். இது 2011ஆம் ஆண்டு இருந்த 10 சதவீதத்தைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதைக் காட்டுகிறது.
  • மேலும் இணைய பயன்பாட்டாளர்களில் ஆண்களின் சதவீதம் 71 ஆகவும் பெண்களின் சதவீதம் 29 ஆகவும் உள்லது.

செய்தித்தாள் ஊடகம்

செய்தித்தாள் எல்லோராலும் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த அச்சு ஊடகத்தின் கீழ்வரும் ஒரு தகவல் தொடர்பு சாதனமாகும். இந்தியாவில் உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் செய்திகளை அளிக்கக்கூடிய பல செய்திதாள்கள் உள்ளன.

செயற்கைக்கோள் தகவல் தொடர்பு

  • செயற்கைக் கோள்ளானது தொடர்ச்சியாக மிகப்பெரும் பரப்பிலான பதிமம் மற்றும் தகவல்களை அளிப்பதன் மூலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனமாக இந்தியாவில் விளங்குகிறது.
  • செயற்கைக்கோள் பதிமங்களைப் பயன்படுத்தி வானிலை ஆய்வு, வானிலை முன் அறிவிப்பு, இயற்கை பேரழிவு கண்காணிப்பு, எல்லை பகுதி கண்காணிப்பு போன்ற முக்கிய பணிகள் மேற்கொள்லப்படுகிண்றன. 1969ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்சி மையம் நிறுவப்பட்ட பின்னர் தொலைத்தொடர்பு பரிமாற்றத்தில் செயற்கைக் கோள்கள் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
  • இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு இரண்டு பிரிவுகளைக் கொண்டது.

1. இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (INSAT)

2. இந்திய தொலையுணர்வு செயற்கைக்கோள் அமைப்பு (IRS)

  • 1983-ல் நிறுவப்பட்ட இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு தொலை தொடர்பு, வானியல் ஆய்வு மற்றும் பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய ஒரு பல்நோக்கு திட்ட அமைப்பாக உள்ளது.
  • இன்சாட் வரிசை செயற்கைக்கோள், கைபேசி, தொலைபேசி, வானொலி மற்றும் தொலைக்காட்சிகளுக்கு சமிக்கைகளை அனுப்பப் பயன்படுகிறது. மேலும் இது வானிலையை கண்டறியவும், ராணுவ பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
  • இன்சாட் வரிசை, ஜி-சாட் வரிசை, கல்பனா 1, ஹேம்சாட், எஜுசாட் (Edusat) போன்றவை தகவல் தொடர்பிற்காக பயன்படுத்தப்படும் முக்கிய செயற்கைக்கோளாகும்.
  • டிசம்பர் 19,2018ஆம் ஆண்டு ஏவப்பட்ட ஜிசாட் 7A தகவல் தொடர்புக்காக சமீப காலத்தில் ஏவப்பட்ட ஒரு செயற்கைக்கோள் ஆகும். ஆகஸ்ட் 30, 1983ஆம் ஆண்டு ஏவப்பட்ட இன்சாட் 1B தகவல் தொடர்பிற்காக ஏவப்பட்ட முதல் இன்சாட் வரிசை செயற்கைக்கோள் ஆகும்.

வணிகம்

  • வணிகம் என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரணியாகும்.
  • வணிகம் என்பது பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதும் விற்பதும் அல்லது பரிமாற்றம் செய்து கொள்ளும் செயலாகும்.
  • பழங்காலத்தில் வணிகமுறையானது பண்டமாற்று முறை என்று அழைக்கப்பட்டது.
  • இங்கே ஒரு பொருளுக்கு ஈடாக மற்றொரு பொருள் பரிமாற்றம் செய்யப்பட்டது. பின்னர் பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் பணம் அளவுகோளாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
  • ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பிற்கு இடையே உள்ள வேறுபாடு வணிகச் சமநிலை (Blance of Trade) எனப்படும்.
  • ஏற்றுமதியாகும் பொருட்களின் மதிப்பு இறக்குமதியாகும் பொருட்களின் மதிப்பை விட அதிகமாக இருந்தால் அதனை சாதகமான வணிகச் சமநிலை என்றும் இதற்கு எதிர்மாறான நிலையை பாதகமான வணிகச் சமநிலை எனவும் அழைக்கிறோம்.

வணிக வகைகள்

பொதுவாக வணிகம் இருவகைப்படும். அவை

1. உள்நாட்டு வணிகம்

2. பன்னாட்டு வணிகம்

  • ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் வணிகம் உள்நாட்டு வணிகம் (Internal trade) எனவும் உள்ளூர் வணிகம் (Local Trade) எனவும் அழைக்கப்படுகிறது.
  • உள்நாட்டு வணிகத்தில் நிலவழிப்போக்குவரத்து முக்கியப்பங்காற்றுகிறது. (குறிப்பாக சாலை மற்றும் இரயில் வழி) இவ்வணிக முறையில் உள்நாட்டு நாணயம் பயன்படுத்தப்படுகிறது.
  • இவ்வணிகமுறை நாட்டின் பிரதேச சமச்சீர் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக அசாமிலிருந்து தேயிலை, கர்நாடகாவிலிருந்து காப்பி, கேரளாவிலிருந்து இரப்பர் மற்றும் வாசணைப் பொருட்கள் , ஜார்கண்டிலிருந்து கனிமங்கள் போன்றவை நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம் பன்னாட்டு வணிகம் அல்லது அயல்நாட்டு வணிகம் என அழைக்கப்படுகிறது.
  • ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியன பன்னாட்டு வணிகத்தின் இரு கூறுகள் ஆகும். பொருட்கள் மற்றும் சேவைகள் அந்நிய நாடுகளுக்கு விற்பது ஏற்றுமதி எனப்படும். அந்நிய நாடுகளிலிருந்து பொருட்களையும் சேவைகளையும் பெறுவது இறக்குமதி எனப்படும்.
  • பன்னாட்டு வணிகத்தில் நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் அந்நிய நாட்டு பணம் பயன்படுத்தப்படுகிறது.
  • வணிகம் இரண்டு நாடுகளுக்கு இடையே நடைபெற்றால் அவை இருத்தரப்பு வணிகம் (Bilateral Trade) என்றும், வணிகம் இரண்டிற்கும் மேற்பட்ட நாடுகளுக்கிடையே நடைபெற்றால் அது பல்தரப்பும் வணிகம் (Multilateral Trade) என்றும் அழைக்கப்படுகிறது.

ஏற்றுமதி பொருட்கள்

காபி, தேயிலை, கடல்சார் பொருட்கள், தாதுக்கள், கனிமங்கள் தோல் பொருட்கள், நவரத்தின கற்கள் மற்றும் ஆபரணங்கள், விளையாட்டு சாமான்கள், இரசாயனம் மற்றும் இரசாயனம் சார்ந்த பொருட்கள், நெகிழிகள், இரப்பர் பொருட்கள், கல்வேலைப்பாட்டு பொருட்கள், சாந்துப் பொருட்கள், சிமெண்ஜ்ட் ஆஸ்பெஸ்ட்டால், மைக்கா, கண்ணாடி பொருட்கள், உலோகக்கலவைகள், மருந்துகள் , அறுவை சிகிச்சை உபகரணங்கள், மின்சாதன பொருட்கள், இயந்திரங்கள், அலுவலக பயன்பாட்டுப் பொருட்கள், ஆடைகள், கைவினைப் பொருட்கள் போன்றவை இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி பொருட்களாகும்.

இறக்குமதி பொருட்கள்

பெட்ரோலிய பொருட்கள், முத்துக்கள், விலையுயர்ந்த மற்றும் மிக விலையுயர்ந்த கற்கள், தங்கம் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் போன்றவை இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருட்களாகும்.

இந்திய வணிகத்தின் செயல்பாடுகள்

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம் பல மடங்கு அதிகரித்துள்ளது. 2008 -09 ஆம் ஆண்டில் 8,40,755 கோடி ரூபாயாக இருந்த வணிகத்தின் மதிப்பு 2016-17ஆம் ஆண்டு 10,39,797 கோடியாகவும் உயர்ந்துள்ளது. 2008-09 ன் ஆம் ஆண்டு இறக்குமதியின் மதிப்பு 13,74,436 கோடியாகவும், வணிகப் பற்றாக்குறை 40,679 கோடியாகவும் இருந்தது. 2016-17 ஆம் ஆண்டு இறக்குமதியின் மதிப்பு 13,96,352 கோடியாகவும் பற்றாக்குறை 3,56,555 கோடியாகவும் உயர்ந்துள்ளது. இது பாதகமான வணிகச் சமநிலையை வெளிப்படுத்துவதோடு பற்றாக்குறையின் அளவு அதிகரித்திருப்பதையும் வெளிப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!