TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 23rd May 2024

1. பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு மற்றும் ஆதரவிற்கான திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. கல்விக்கு நிதியுதவி வழங்குதல்

. 18 வயது பூர்த்தியடையாத பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பிணிகளுக்கு ஒருங்கிணைந்த ஆதரவையும் உதவியையும் வழங்குதல்

இ. 18 வயது பூர்த்தியடையாத பெண்களுக்கு தொழிற்பயிற்சி அளித்தல்

ஈ. பள்ளிகளில் பாதுகாப்பை உறுதிசெய்தல்

  • பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் ஆதரவு திட்டத்தில் பல இடைவெளிகள் உள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு மற்றும் ஆதரவிற்கான திட்டமானது POCSO சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட 18 வயது பூர்த்தியடையாத பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பிணிகளுக்கு உதவுகிறது. நிர்பயா நிதியத்தால் நிதியளிக்கப்படுகிற இது, 18 வயது வரையிலான சிறுமிகளுக்கு ஒருங்கிணைந்த ஆதரவை வழங்குகிறது. மருத்துவக்காப்பீடு, சட்ட உதவி மற்றும் தொடக்கத்தில் `6,000 நிதியுதவி மற்றும் வாத்சல்ய திட்டத்தின்கீழ் மாதந்தோறும் `4,000 நிதியுதவி ஆகியவை இத்திட்டத்தின்கீழ் அடங்கும்.

2. அண்மையில், ஆந்திர பிரதேச மாநில பல்லுயிர் வாரியத்தால் உருவாக்கப்பட்ட பல்லுயிர் பாதுகாப்பு விருதைப் பெற்ற சிறைச்சாலை எது?

அ. கடப்பா மத்திய சிறைச்சாலை

ஆ. இராஜமுந்திரி மத்திய சிறைச்சாலை

இ. நெல்லூர் மத்திய சிறைச்சாலை

ஈ. விசாகப்பட்டினம் மத்திய சிறைச்சாலை

  • இராஜமுந்திரி மத்திய சிறைச்சாலைக்கு ஆந்திர பிரதேச மாநில பல்லுயிர் வாரியத்தால் பல்லுயிர் பாதுகாப்பு விருது வழங்கப்பட்டது. நிலத்தடி நீர் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை மற்றும் இயற்கையான பொருட்களைக் கொண்டு கைவினை செய்தல் உள்ளிட்ட சிறைச்சாலையின் சூழல்-நட்பு முயற்சிகளை இந்த விருது அங்கீகரிக்கிறது. மாநில பல்லுயிர் வாரியங்கள், உயிரியல் பன்முகத்தன்மை சட்டம், 2002இன்படி அனைத்து மாநிலங்களிலும் உள்ளன ஆனால் யூனியன் பிரதேசங்களில் இல்லை; அவற்றுக்கு இணையாக தேசிய பல்லுயிர் ஆணையம் செயல்படுகிறது.

3. ‘Emblica chakrabarti’ என்ற புதிய தாவர இனம், கேரளத்தின் எந்த மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

அ. எர்ணாகுளம்

ஆ. கோழிக்கோடு

இ. காசர்கோடு

ஈ. கொல்லம்

  • கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில், குறிப்பாக எடமலையாறு வனப்பகுதியில் அமைந்துள்ள அடிசில்தொட்டியில், ‘Emblica chakrabarti’ என்ற புதிய தாவர இனம் கண்டறியப்பட்டுள்ளது. Phyllanthaceae குடும்பத்தைச் சேர்ந்த, Emblica தாவரங்கள் பொதுவாக வெப்பமண்டல மழைக்காடுகளில் புதர்களாக செழித்து, 2 மீ உயரம் வரை வளருகின்றன. டிசம்பர் முதல் ஜூன் வரை அவை பூத்து காய்காய்க்கும். இந்தக் கண்டுபிடிப்பு இப்பகுதியின் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிப்பதோடு, அதன் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

4. உலக பொருளாதார மன்றத்தின் 2024 – பயணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. 35

ஆ. 39

இ. 45

ஈ. 50

  • உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள 2024 – பயணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா 39 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது; இது தொற்றுநோய்க்குப் பிந்தைய சுற்றுலா மறுமலர்ச்சியைக் குறிக்கிறது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது; தெற்காசியாவிலும், குறைந்த நடுத்தர வருவாய்கொண்ட நாடுகளிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் வளங்கள் இந்தியாவின் பயண நிலைத்தன்மையைத் தூண்டுகின்றன. முன்பு 2021இல் 54ஆம் இடத்தில் இந்தியா இருந்தது. முதல் ஐந்து இடங்களில் அமெரிக்கா, ஸ்பெயின், ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன.

5. அண்மையில், அரசு ஒப்பந்த வேலைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை உறுதிசெய்த மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

. கர்நாடகா

இ. மகாராஷ்டிரா

ஈ. கேரளா

  • கர்நாடக மாநில அரசு ஒப்பந்த முறையிலான அரசுப்பணிகளிலும் பதவிகளிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை கட்டாயமாக்குகிறது; இது நிரந்தரப் பதவிகளுக்கான தற்போதைய ஒதுக்கீட்டுக் கொள்கையுடன் ஒத்துப்போகிறது. இவ்விடஒதுக்கீடு SC/ST மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான ஒதுக்கீட்டிற்குள் உள்ளது. இது, பல்வேறு அரசுத்துறைகள் & நிறுவனங்கள் முழுவதும் ஒப்பந்த முறையில் வழங்கப்படும் அரசுப்பணிகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்கிறது.

6. 2024 – பன்னாட்டு உயிரியல் பன்முகத்தன்மை நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Be part of the Plan

ஆ. We’re part of the solution #ForNature

இ. From Agreement to Action: Build Back Biodiversity

ஈ. Building a shared future for all life

  • மனித இனத்தின் நல்வாழ்வுக்கு இன்றியமையாத பல்லுயிர் என்ற பதம், 1985இல் வால்டர் ஜி ரோசன் என்பவரால் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. வாழ்விட இழப்பு, மாசு (ம) தட்பவெப்பநிலை மாற்றம்போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிற இது, இனங்கள் அழிவு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவுக்கு வழிவகுக்கிறது. 2024ஆம் ஆண்டு மே.22 அன்று கடைப்பிடிக்கப்பட்ட பன்னாட்டு பல்லுயிர் நாளுக்கானக் கருப்பொருள், “Be part of the Plan” என்பதாகும்.

7. PM-WANI திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. மாணாக்கர்க்கு இலவச மடிக்கணினி வழங்குதல்

ஆ. கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளுக்கு மலிவு மற்றும் அதிவேக இணைய இணைப்பை வழங்குதல்

இ. நகர்ப்புறங்களில் அலைபேசி அலைவரிசை கிடைப்பை மேம்படுத்துதல்

ஈ. எண்ம வழி செலுத்துகை முறைகளை ஊக்குவித்தல்

  • Prime Minister Wi-Fi Access Network Interface (PM-WANI) திட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட பொது வைஃபை பகிரலை புள்ளிகளின் எண்ணிக்கை 200,000-ஐ நெருங்கிவிட்டன. தொலைத்தொடர்புத் துறையால் கடந்த 2020 டிசம்பரில் தொடங்கப்பட்ட PM-WANI திட்டமானது கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் மலிவு விலையில், அதிவேக இணையத்தை வழங்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இத்திட்டம் பொதுத்தரவு அலுவலகங்கள் அமைத்துள்ள Wi-Fi அணுகல் புள்ளிகளைப் பயன்படுத்தி ஒரு பொது வைஃபை வலையமைப்பை நிறுவுகிறது. பல சேவை வழங்குநர்கள் இணைய சேவைகளை வழங்க இது உதவுகின்றது.

8.‘Naegleria Fowleri’ என்றால் என்ன?

அ. அமீபா

ஆ. ஆக்கிரமிப்புக் களை

இ. புரதம்

ஈ. சிறுகோள்

  • கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், ‘Naegleria Fowleri’ நோய்த்தொற்றால் சமீபத்தில் உயிரிழந்தார். மண் மற்றும் வெதுவெதுப்பான நன்னீர் ஆகியவற்றில் காணப்படும் இந்த அமீபா, மூக்கு வழியாக மூளைக்குச் சென்றால், முதன்மை அமீபிய மூளையழற்சி ஏற்படுகிறது. ‘மூளையை உண்ணும் அமீபா’ என்று அழைக்கப்படும், ‘Naegleria fowleri’ தொற்றுகள் அரிதானவை ஆனால் ஆபத்தானவை. இந்த அமீபா தொற்று ஏற்பட்டவுடன் மூளை திசுக்களை அழிக்கும் வேலையில் இறங்கும்.

9. அண்மையில், WBC இந்தியா குரூசர்வெயிட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற சந்துரு G சார்ந்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. பீகார்

ஈ. பஞ்சாப்

  • WBC இந்தியா குரூசர்வெயிட் சாம்பியன்ஷிப் போட்டியில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜஸ்கரன் சிங்கை 4ஆவது சுற்றில் நாக்-ஔட் செய்து தமிழ்நாட்டின் சந்துரு G பட்டத்தை வென்றார். சந்துரு G, 10-0 என்ற சாதனையுடன் போட்டியை நிறைவு செய்தார். இரண்டாவது சுற்றில் கடுமையான ஆதிக்கம் செலுத்திய அவர், நான்காம் சுற்றில் அதிரடியாக வென்றார். அவர் தனது இந்த வெற்றியை ஆதரவாளர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் அர்ப்பணித்தார்.

10. ஒரு நாட்டுப்புறத் திருவிழாவான கங்கம்மா யாத்திரை கொண்டாடப்படுகிற மாநிலம் எது?

அ. ஒடிஸா

ஆ. கேரளா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. கர்நாடகா

  • மே மாதத்தின் முதல் பாதியில் கொண்டாடப்படும் ஒரு வார கால நாட்டுப்புறத் திருவிழாவான கங்கம்மா யாத்திரை, ஆந்திர பிரதேசத்தின் திருப்பதியில் கொண்டாடப்படும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். வெங்கடேசுவராவின் தங்கையாகக் கருதப்படும் கங்கம்மா தேவியை போற்றும் இந்தத் திருவிழா, தத்தைகுண்டா கங்கம்மா கோவிலை நோக்கி பக்தர்களை ஈர்க்கிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்கடேசப் பெருமானிடமிருந்து கங்கம்மா தேவிக்கு, பிறந்தநாள் பரிசு அனுப்பப்படுவது இவ்விழாவின் தனித்த மரபுகளில் அடங்கும்.

11. அண்மையில், கொச்சியில் 46ஆவது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய நாடு எது?

அ. இந்தியா

ஆ. ஆஸ்திரேலியா

இ. பிரான்ஸ்

ஈ. ரஷ்யா

  • துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகம் ஏற்பாடு செய்த 46ஆவது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டத்தை இந்தியா கொச்சியில் நடத்தியது. அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக்கூட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு ஆகியவை 1959இல் ஐம்பத்தாறு நாடுகள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி நடத்தப்படும் உயர்மட்ட உலகளாவிய வருடாந்தர கூட்டங்கள் ஆகும்.
  • இக்கூட்டங்களின் போது, அண்டார்டிகா ஒப்பந்தத்தின் உறுப்பு நாடுகள் அண்டார்டிகாவின் அறிவியல், கொள்கை, நிர்வாகம், மேலாண்மை, பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு 1991ஆம் ஆண்டில் அண்டார்டிக் ஒப்பந்தத்திற்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நெறிமுறையின்கீழ் நிறுவப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு அண்டார்டிகாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அண்டார்டிக் ஒப்பந்தக் கூட்டத்திற்கு ஆலோசனை வழங்குகிறது.

12. சாலைகளில் வாகனத்தின் வேகத்தை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ரேடார் வேக துப்பாக்கிகளுக்கான புதிய விதிகளை முன்மொழிந்துள்ள அமைச்சகம் எது?

அ. நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம்

ஆ. MSME அமைச்சகம்

இ. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • ரேடார் வேக துப்பாக்கிகளுக்கான புதிய விதிகளை நுகர்வோர் விவகார அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. ரேடார் உபகரணங்கள் நிறுவப்பட்ட ஓராண்டுக்குள் சரிபார்ப்பு செய்யப்பட்டதற்கான முத்திரை இடப்பட்டிருக்க வேண்டும் எனவும், தற்போதுள்ள உபகரணங்களுக்கு உரிய நேரத்தில் மறு சரிபார்ப்பு செய்யப்பட வேண்டும் எனவும் இந்தப் புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாடு-டென்மார்க் கல்வித்திட்டங்கள் பகிர்வு.

தமிழ்நாடு மற்றும் டென்மார்க் இடையே கல்வித்திட்டங்களை பகிர்ந்துகொண்டதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும், புதுமைப்பெண் போன்ற திட்டங்களால் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்பதையும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!