Tnpsc

குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை Notes 6th Social Science

6th Social Science Lesson 11 Notes in Tamil

11] குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

கி.மு.(பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டின் முக்கியத்துவம்:

கி.மு.(பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டில் புதிய பிராந்திய அரசுகள் உருவாயின. இதன் விளைவாக கங்கைச் சமவெளியில் வாழ்ந்த மக்களின் அரசியல் சமூகப் பொருளாதார வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. வட இந்தியாவில் புதிய அறிவு மலர்ச்சி தோன்றி வளரத் தொடங்கியது. மகாவீரரும் கௌதம புத்தரும் இந்த புது எழுச்சிக்கு வித்திட்டனர்.

சமூகத்தை மாற்றியதில் இரும்பின் பங்கு:

சமூக மாற்றத்தில் இரும்பு குறிப்பிடத்தக்கப் பங்கினை வகித்தது. கங்கைச் சமவெளியின் வளமான மண், இரும்பினாலான கொழுமுனையின் பயன்பாடு ஆகியவற்றால் வேளாண் உற்பத்தி அதிகரித்தது. இத்துடன் இரும்பு, கைவினைப் பொருட்களின் உற்பத்தியை எளிதாக்கியதோடு அதிகரிக்கவும் உதவியது. வேளாண் உபரியும், அதிக அளவிலான கைவினைப் பொருட்களின் உற்பத்தியும் வணிக மற்றும் பரிமாற்ற மையங்களைத் தோற்றுவித்தன. இவ்வளர்ச்சி நகரங்களும் பெருநகரங்களும் உருவாவதற்கு வழி வகுத்தது. இரும்பைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட நிபுணத்துவம் மற்றைய மகாஜனபதங்களைவிட மகதம் எழுச்சி பெற முக்கிய காரணமாயிற்று. இவ்வாறாக மகதம் தனக்கான ஒரு பேரரசை உருவாக்கியது.

கணசங்கங்களும் அரசுகளும்:

கி.மு.(பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டில் வடஇந்தியாவில் இருவகைப்பட்டஅரசுகள் செயல்பட்டன.

  • கண-சங்கங்கள்-முடியாட்சிமுறைக்கு முன்னால் மேட்டுக்குடி மக்கள் அடங்கிய குழுவின் ஆட்சி.
  • முடியாட்சி அரசுகள் – மன்னராட்சி முறையில் அமைந்தவை.

ஜனபதங்களும் மகாஜனபதங்களும்:

மக்கள் குழுவாக குடியேறிய தொடக்ககால இடங்களே ஜனபதங்கள் ஆகும். பின்னர் ஜனபதங்கள் குடியரசுகளாகவோ, சிற்றரசுகளாகவோ ஆனது. கங்கைச் சமவெளியில் இரும்பின் பரவலான பயஙன்பாட்டால் பரந்து விரிந்த மக்கள் வாழும் பகுதிகள் தோன்றின. இதனால் ஜனபதங்கள் மகாஜனபதங்களாக மாற்றம் பெற்றன.

பதினாறு மகாஜனபதங்கள் (“பெரும் அரசுகள்”):

கி.மு.(பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டில் சிந்து கங்கைச் சமவெளியில் பதினாறு மகாஜனபதங்கள் இருந்தன. இது நாடோடி வாழ்க்கை முறையையும், இரத்த உறவுகளையும் அடிப்படையாகக் கொண்டிருந்த ஒரு சமூகம், வேளாண் சமூகமாக மாறத் தொடங்கிய காலம் ஆகும். அத்துடன் வணிகம் செய்யவும், பரிமாற்றம் செய்யவும் தொடங்கியது. எனவே நன்கு கட்டமைக்கப்பட்ட மற்றும் வலுவான ஆட்சி அவசியமாயிற்று. அதற்கு மையப்படுத்தப்பட்ட அரசு தேவைப்பட்டது.

இக்காலத்தில் நான்கு முக்கிய மகாஜனபதங்கள் இருந்தன. அவைகள்:

மகதம் – பீகார்.

அவந்தி – உஜ்ஜைனி.

கோசலம் – கிழக்கு உத்திரப்பிரதேசம்.

வச்சம் – கோசாம்பி, அலகாபாத்.

இந்த நான்கு மகாஜனபதங்களில் மகதம் ஒரு பேரரசாக உருவானது.

மகதத்தின் எழுச்சிக்கான காரணங்கள்:

  • மகதம் கங்கைச் சமவெளியின் கீழ்ப்பகுதியில் அமைந்து இருந்தது. வளம் மிகுந்த இந்தச் சமவெளி வேளாண் விளைச்சலை அதிகரித்தது. இது அரசுக்கு நிலையான, கணிசமான வருமானத்தை அளித்தது.
  • அடர்ந்த காடுகள் கட்டுமானங்களுக்குத் தேவையான மரங்களையும் படைகளுக்குத் தேவையான யானைகளையும் வழங்கியது.
  • அதிக அளவிலான இயற்கை வளங்கள் குறிப்பாக இரும்பு ஆயுதங்கள் செய்யவும் மேம்படுத்திக் கொள்ளவும் அவர்களுக்கு உதவியது.

மகதப் பேரரசு

  • வணிக, வர்த்தக வளர்ச்சி மக்களை இடம் விட்டு இடம் சென்று கலை மற்றும் தொழில் மையங்களில் குடியேறச் செய்தது.
  • இவற்றின் விளைவாக நகரமயமாதல் ஏற்பட்டு மகதம் பேரரசாக எழுச்சி பெற்றது.

பண்டைய மகதத்தின் அரச வம்சங்கள்:

நான்கு அரச வம்சங்கள் மகதத்தை ஆண்டன.

  • ஹரியங்கா வம்சம்.
  • சிசுநாக வம்சம்.
  • நந்த வம்சம்.
  • மௌரிய வம்சம்.

ஹரியங்கா வம்சம்:

மகதத்தின் படிப்படியான அரசியல் மேலாதிக்க வளர்ச்சி ஹர்யங்கா வம்சத்தைச் சேர்ந்த பிம்பிசாரர் காலத்தில் தொடங்கியது. படையெடுப்பு, திருமண உறவு ஆகிய வழிகளில் பிம்பிசாரர் லிச்சாவி, மதுரா மற்றும் கோசல ஆகிய பகுதிகளில் தமது அரசை விரிவுபடுத்தினார். அவருடைய மகன் அஜாதசத்ரு (புத்தரின் சமகாலத்தவர்) ராஜகிரகத்தில் முதல் பௌத்த சபை மாநாட்டைக் கூட்டினார். அவருடைய வாரிசான உதயன் பாடலிபுத்திரத்தில் புதிய தலைநகருக்கான அடித்தளமிட்டார்.

சிசுநாக வம்சம்:

ஹர்யங்கா அரச வம்சத்தைத் தொடர்;ந்து சிசுநாக அரச வம்சத்தினர் ஆட்சிப் பொறுப்பேற்றனர். இவவ்மசத்தைச் சேர்ந்த அரசர் காலசோகா தலைநகரை ராஜகிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றினார். இவர் இரண்டாம் பௌத்த மாநாட்டை வைசாலியில் கூட்டினார்.

நந்த வம்சம்:

நந்தர்களே இந்தியாவில் முதன்முதலாகப் பேரரசை உருவாக்கியவர்கள் ஆவர். முதல் நந்தவம்ச அரசர் மகாபத்ம நந்தர் ஆவார். அவரைத் தொடர்ந்து அவருடைய எட்டு மகன்களும் ஆட்சி செய்தனர். அவர்கள் நவநந்தர்கள் (ஒன்பது நந்தர்கள்) என்றழைக்கப்பட்டனர். கடைசி அரசரான தனநந்தர் சந்திரகுப்த மௌரியரால் வெற்றி கொள்ளப்பட்டார்.

மௌரியப் பேரரசு:

சான்றுகள்

தொல்லியல் சான்றுகள் முத்திரை பதிக்கப்பட்ட நாணயங்கள்
கல்வெட்டுகள் அசோகரின் கல்வெட்டுப் பேராணைகள், ஜீனாகத் கல்வெட்டு ஆகியவை
மதச்சார்பற்ற இலக்கியங்கள் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் விசாகதத்தரின் முத்ராராட்சஷம் மாமூலனாரின் அகநானூற்றுப் பாடல்
மதம் சார்ந்த இலக்கியங்கள் சமண, பௌத்த நூல்கள், புராணங்கள்
வெளிநாட்டுச் சான்றுகள் தீபவம்சம், மகாவம்சம், இன்டிகா

மௌரியப் பேரரசு – இந்தியாவின் முதல் பேரரசு:

தலைநகர் பாடலிபுத்திரம் (தற்போதைய பாட்னா)
அரசு முடியாட்சி
வரலாற்றுக் காலம் ஏறத்தாழ கி.மு.(பொ.ஆ.மு) 322 முதல் 187 வரை
முக்கிய அரசர்கள் சந்திரகுப்தர், பிந்துசாரர், அசோகர்

சந்திரகுப்த மௌரியர்:

மௌரியப் பேரரசே இந்தியாவின் முதல் பெரிய பேரரசாகும். சந்திரகுப்த மௌரியர் இப்பேரரசை மகதத்தில் நிறுவினார். பத்ரபாகு எனும் சமணத்துறவி சந்திர குப்தரை தென்னிந்தியாவிற்கு அழைத்துச் சென்றார். சந்திரகுப்தர் சரவணபெலகொலாவில் (கர்நாடகா) சமணச் சடங்கான சல்லேகனா செய்து உயிர் துறந்தார். (சல்லேகனா என்பது உண்ணா நோன்பிருந்து உயர் துறத்தல் ஆகும். இது ஒரு சமணச் சடங்கு முறையாகும்.)

பிந்துசாரார்:

பிந்துசாரரின் இயற்பெயர் சிம்ஹசேனா. இவர் சந்திரகுப்த மௌரியரின் மகன் ஆவார். கிரேக்கர்கள் பிந்துசாரரை அமிர்தகதா என்று அழைத்தனர். அதன் பொருள் “எதிரிகளை அழிப்பவன்” என்பதாகும். பிந்துசாரரரின் ஆட்சியின்போது மௌரியரின் ஆட்சி இந்தியாவின் பெரும்பகுதியில் பரவியது. அவர் தனது மகன் அசோகரை உஜ்ஜைனியின் ஆளுநராக நியமித்தார். அவருக்குப்பின் அசோகர் மகதத்தின் அரசரானார்.

அசோகர்:

மௌரிய அரசர்களின் மிகவும் புகழ் பெற்றவர் அசோகர் ஆவார். அவர் “தேவனாம்பிரியர்” என்றழைக்கப்பட்டார். “கடவுளுக்குப் பிரியமானவன்” என்பது இதன் பொருள் ஆகும்.

அசோகர் கி.மு.(பொஆ.மு.) 261ல் கலிங்கத்தின் மீது போர் தொடுத்தார். அப்போரில் வென்று கலிங்கத்தைக் கைப்பற்றினார். அப்போரின் பயங்கரத்தை அசோகரே தன்னுடைய 13வது பாறைக் கல்வெட்டில் விவரித்துள்ளார்.

சந்த அசோகர் (தீய அசோகர்) தம்ம அசோகராக (நீதிமான் அசோகர்) மாற்றம்:

கலிங்கப் போருக்குப் பின்னர் அசோகர் ஒரு பௌத்தர் ஆனார். தர்மத்தின் கொள்கையை மக்களுக்குப் பரப்புவதற்காக அவர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றுப் பயணங்கள் (தர்மயாத்திரைகள்- Dharmayatras) மேற்கொண்டார். அசோகரின் இரண்டாம் தூண் கல்வெட்டில் தர்மத்தின் பொருள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. அது அனைத்து மதங்களின் சாரமாகவுள்ள மிக உயர்ந்த கருத்தான மனிதாபிமானத்தை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.

கீழ்க்கண்டவைகளுக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அவை:

  • இரக்க உணர்வு.
  • அறக்கொடை. தூய்மை.
  • புனிதத்தன்மை. சுய-கட்டுபாடு.
  • உண்மையுடைமை.
  • மூத்தோர், ஆசிரியர், ஆசிரியர், பெற்றோர் ஆகியோரிடத்தில் மரியாதையுடனும், பணிவுடனும் நடந்து கொள்ளல்.

அவர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பி வைத்தார். தம்மத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக மேற்கு ஆசியா, எகிப்து, கிழக்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கு சமயப்பரப்பாளர்களை அனுப்பி வைத்தார். அசோகர் தர்ம-மகாமாத்திரர்கள் என்னும் புதிய அதிகாரிகளை நியமித்தார். பேரரசு முழுவதிலும் பௌத்தமத்தைப் பரப்புவதே அவர்களுடைய பணியாகும். அசோகர் தனது தலைநகரான பாடலிபுத்திரத்தில் மூன்றாம் பௌத்த மத மாநாட்டைக் கூட்டினார்.

அசோகரின் பேராணைகள்:

பேரரசர் அசோகருடைய ஆணைகள் மொத்தம் முப்பத்திமூன்று. அவைகள் அசோகரால் தூண்களிலும், பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன. அவை அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றின் மீது அசோகர் கொண்டிருந்த நம்பிக்கையையும், மக்களின் நலன் மீது அவர் கொண்டிருந்த அக்கறையையும் விவரிக்கின்றன.

அசோகருடைய இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டுகள் மூவேந்தர்களான பாண்டியர், சோழர், கேரளபுத்திரர் ஆகியோரையும் சத்யபுத்திரர்களையும் குறிப்பிடுகின்றன.

மௌரியரின் நிர்வாகம்:

மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் அரசர்:

  • அரசரே மௌரியப் பேரரசின் மேலான இறையாண்மை மற்றும் அதிகாரம் உடையவர் ஆவார்.
  • “மந்திரிபரிஷத்” எனும் அமைச்சரவை அரசருக்கு உதவியது. இந்த அமைச்சரவை ஒரு புரோகிதர், ஒரு சேனாபதி, ஒரு மகாமந்திரி மற்றும் இளவரசனைக் கொண்டதாகும்.
  • அரசர் ஒரு மிகச் சிறந்த உளவுத்துறையைக் கொண்டிருந்தார்.

வருவாய் முறை:

  • நிலங்களே அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தந்தது. லும்பினியிலுள்ள அசோகரது கல்வெட்டு பாலி மற்றும் பாகா என்னும் இரண்டு வரிகளைக் குறிப்பிடுகின்றது.
  • மொத்த விளைச்சலில் 1/6 பங்கு (பாகா) நிலவரியாக வசூல் செய்யப்பட்டது.
  • காடுகள், சுரங்கங்கள், உப்பு மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வரிகள் அரசுக்கு கூடுதல் வருவாயாக அமைந்தன.
  • அரசு வருவாயில் பெரும்பகுதி இராணுவத்திற்கான ஊதியம், அரசு அதிகாரிகளுக்கான ஊதியம், அறக்கட்டளைகள், நீர்ப்பாசனத் திட்டங்கள், சாலைகள் அமைத்தல் போன்ற பொதுப்பணிகள் ஆகியவைகளுக்காகச் செலவழிக்கப்பட்டது.

நீதி நிர்வாகம்:

  • அரசரே நீதித்துறையின் தலைவராவார். அவரே மேலமுறையீட்டு நீதிமன்றமும் ஆவார்.
  • அரசர் தனக்குக் கீழாக பல துணை நீதிபதிகளை நியமித்தார். தண்டனைகள் கடுமையாக இருந்தன.

இராணுவ நிர்வாகம்:

அரசரே படைகளின் தலைமைத் தளபதியாவார்.

முப்பது நபர்களைக் கொண்ட குழு ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு குழுவும் கீழ்க்கண்டவற்றை நிர்வாகம் செய்தது.

  • கடற்படை.
  • ஆயுதங்கள் (போக்குவரத்து மற்றும் விநியோகம்).
  • காலாட்படை.
  • குதிரைப்படை.
  • தேர்ப்படை.
  • யானைப்படை.

நகராட்சி நிர்வாகம் (நகரம் மற்றும் மாநகரம்):

  • நகரத்தை நிர்வாகம் செய்வதற்காக 30 உறுப்பினர்களைக் கொண்ட குழுவானது 5 உறுப்பினர்களைக் கொண்ட ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
  • நகரம் நிர்வாகம் “நகரிகா” என்னும் அதிகாரியின் கீழிருந்தது. அவருக்கு ஸ்தானிகா, கோபா எனும் அதிகாரிகள் உதவி செய்தனர்.

நாணயம்:

பணம் வணிகத்திற்காக மட்டும் பயன்படுத்தப்படவில்லை. அரசாங்கம் பணியாளர்களுக்கு ஊதியத்தைப் பணமாகவே வழங்கியது.

மயில், மலை மற்றும் பிறைச் சந்திர வடிவம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் (பணம்), “மாஸாகாஸ்” என்று அழைக்கப்பட்ட செப்பு நாணயங்கள் ஆகியன அரசினுடைய நாணயங்களாக இருந்தன.

வணிகமும் நகரமயமாதலும்:

வணிகம் செழிப்புற்றது. குறிப்பாக கிரேக்கம் (ஹெலனிக்) மலேயா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளுடன் பெருமளவு வணிகம் நடைபெற்றது. காசி (பனாரஸ்) வங்கா (வங்காளம்) காமரூபா (அஸ்ஸாம்) மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மதுரை ஆகிய இடங்களில் சிறப்பு மிக்க துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன என அர்த்தசாஸ்திரம் குறிப்பிடுகிறது.

முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் முக்கிய இறக்குமதிப் பொருட்கள்
நறுமணப் பொருள்கள்.

முத்துக்கள்.

வைரங்கள்.

பருத்தி இழை துணி.

தந்தத்தினாலான பொருட்கள்,

சங்குகள், சிப்பிகள்

குதிரைகள்.

தங்கம்.

கண்ணாடிப் பொருட்கள்

பட்டு (லினன்)

மௌரியர்கால நாணயங்கள்

மௌரியர் கலையும் கட்டடக்கலையும்:

மௌரியர் கால கலையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

  • உள்ளுர்க் கலை – யக்க்ஷன், யக்க்ஷி உருவச் சிலைகள்.
  • அரச கலைகள் – அரண்மனைகள் மற்றும் பொது கட்டடங்கள், ஒற்றைக் கல் தூண்கள், பாறை குடைவரைக் கட்டடக்கலை, ஸ்தூபிகள்.

யக்க்ஷா, யக்க்ஷி சிலைகள்

ஸ்தூபி:

ஸ்தூபியானது செங்கல் அல்லது கற்களால் கட்டப்பட்டுள்ள அரைக்கோள வடிவமுடைய குவிமாடம் போன்ற அமைப்பாகும். புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

மத்தியப்பிரதேச மாநிலத் தலைநகர் போபாலுக்கு அருகேயுள்ள சாஞ்சி

சாரநாத்திலுள்ள ஒற்றைக்கல் தூண்:

இத்தூணின் சிகரப்பகுதியில் தர்மச்சக்கரம் இடம் பெற்றுள்ளது.

பாறைக் குடைவரை கலையின் தொடக்கம்:

நாகார்ஜீனா பராபர் குன்றுகளிலுள்ள பாறை குடைவரைக் குகைக் கோவில்கள்.

புத்தயாவுக்கு வடபுறம் பல குகைகள் உள்ளன. பராபர் குன்றிலுள்ள மூன்று குகைகளில் அசோகருடைய அர்ப்பணிப்புக் கல்வெட்டுகள் உள்ளன. (இக்குகைகள் யாருக்காக அமைத்துத் தரப்பட்டன என்ற விபரங்கள் அடங்கிய கல்வெட்டுகள்)

நாகார்ஜீன கொண்டாவிலுள்ள மூன்று குகைகளில் தசரத மௌரியரின் (அசோகரின் பேரன்) கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன.

மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள்:

  • அசோகருக்குப் பின் வந்த அரசர்கள் மிகவும் வலிமை குன்றியவர்களாக இருந்தனர்.
  • பேரரசின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்ற கலகங்கள்.
  • பாக்டீரிய நாட்டைச் சேர்ந்த கிரேக்கர்களின் படையெடுப்பு பேரரசை மேலும் வலிமை குன்றச் செய்தது.
  • மௌரியப் பேரரசின் கடைசி அரசர் பிருகத்ரதா அவருடைய படைத் தளபதியான புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார். அவரே சுங்க அரசவம்சத்தை நிறுவினார்.
பண்டைய பெயர் தற்போதைய பெயர்
ராஜகிரகம் ராஜ்கிர்
பாடலிபுத்திரம் பாட்னா
கலிங்கா ஒடிசா

மீள்பார்வை:

  • கி.மு. (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டு ஒரு முக்கியமான திருப்புமுனையாகும். பதினாரு மகாஜனபதங்களின் எழுச்சிக்கு அது சாட்சியாய் இருந்தது.
  • பதினாறு மகாஜனபதங்களில் மகதம் ஒரு பேரரசாய் எழுச்சி பெற்றது.
  • மகதம் ஹரியங்கா, சிசுநாக, நந்த, மௌரிய அரச வம்சங்களால் ஆளப்பட்டது.
  • சந்திரகுப்த மௌரியர், மௌரியப் பேரரசை நிறுவினார்.
  • மௌரிய அரசர்களில் அசோகர் மிகவும் புகழ் பெற்றவர்.
  • அசோகரின் தூண் கல்வெட்டுகளும் மற்றும் பாறைக் கல்வெட்டுகளும், தம்மா பற்றிய அவரது கொள்கைகளை நமக்கு உணர்த்துகின்றன.

சொல் விளக்கம்:

சமத்துவம் – Egalitarian

மடாலயம் – Monastery

ஆய்வுநூல் – Treatise

பேரச்சமும் நடுக்கமும் – Horror

உங்களுக்கு தெரியுமா?

கணா என்னும் சொல் சரிசமமான சமூக அந்தஸ்தைக் கொண்ட மக்களைக் குறிக்கும். ‘சங்கா’ என்றால் ‘மன்றம்’ என்று பொருள். கண சங்கங்கள் சிறிய நிலப்பகுதியில் மேட்டுக்குடி மக்களைக் கொண்ட குழுவால் ஆளப்பட்டது. கண சங்கங்கள் சமத்துவ மரபுகளைப் பின்பற்றின.

‘முடியாட்சி’ அரசு என்பது ஒரு நிலப்பகுதியை அரசனோ அல்லது அரசியோ ஆள்வதாகும். முடியாட்சி முறை அரசில் ஒரு குடும்பம் நீண்ட காலம் ஆட்சி செய்யும்போது அது அரச வம்சமாக மாறுகிறது. இந்த அரசுகள் வைதீக வேத மரபுகளைப் பின்பற்றின.

16 மகாஜனபதங்கள்:

அங்கம், மகதம், வஜ்ஜி, காசி, மல்லம், குரு, கோசலம், அவந்தி, சேதி, வத்சம், பாஞ்சாலம், மத்சயம், சூரசேனம், அஸ்மகம், காந்தாரம் மற்றும் காம்போஜம்.

நாளந்தா – யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னம்:

நாளந்தா பண்டைய மகத நாட்டில் இருந்த பௌத்த மடாலயம் ஆகும். குப்தர்களின் காலத்தில் அது மிகப் புகழ் பெற்ற கல்வி மையமாகத் திகழ்ந்தது. நாளந்தா என்னும் சமஸ்கிருதச் சொல் நா+அலம்+தா என்ற மூன்று சமஸ்கிருத சொற்களின் இணைப்பில் உருவானது. இதன் பொருள் ‘வற்றாத அறிவை அளிப்பவர்’ என்பதாகும்.

மெகஸ்தனிஸ்:

கிரேக்க ஆட்சியாளர் செலுக்கஸ் நிகேட்டரின் தூதுவராக, சந்திரகுப்த மௌரிய அரசவையில் இருந்தவர். பதினான்கு ஆண்டுகள் இந்தியாவில் இருந்தார். அவர் எழுதிய நூலின் பெயர் இண்டிகா. மேரியப் பேரரசைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள இந்நூல் ஒரு முக்கியச் சான்றாகும்.

பாடலிபுத்திரத்தின் பிரம்மாண்டம்:

மௌரியப் பேரரசின் மாபெரும் தலைநகரான பாடலிபுத்திர நகருக்கு 64 நுழைவு வாயில்களும் 570 கண்காணிப்பு கோபுரங்களும் இருந்தன.

“அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்று வரை ஒளிர்கிறார்” – வெல்ஸ். வரலாற்றறிஞர்.

சிங்கமுகத் தூண்:

சாரநாத்திலுள்ள அசோகருடைய தூணின் சிகரப் பகுதியில் அமைந்துள்ள சிங்க உருவங்கள் இந்திய தேசிய சின்னமாகவும், வட்ட வடிவ அடிப்பகுதியில் இடம் பெற்றுள்ள சக்கரம் இந்தியாவின் தேசியக் கொடியின் மையச் சக்கரமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அசோகர் கல்வெட்டுகளில் எழுத்துமுறை:

சாஞ்சி – பிராமி.

காந்தகார் – கிரேக்கம் மற்றும் அராமிக்.

வடமேற்குப் பகுதிகள் – கரோஸ்தி.

பேராணை – அரசரால் அல்லது உயர் பதவியில் இருப்பவரால் வெளியிடப்பட்ட ஆணை அல்லது பிரகடனம் ஆகும்.

ருத்ரதாமனின் ஜீனாகத்/கிர்னார் கல்வெட்டு சுதர்னா ஏரி எனும் நீர்நிலை உருவாக்கப்பட்டதைப் பதிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் சந்திரகுப்த மௌரியரின் காலத்தில் தொடங்கப்பட்டது. அசோகரின் காலத்தில் பணிகள் நிறைவு பெற்றன.

யக்க்ஷன் என்பது நீர், வளம், மரங்கள், காடுகள், காட்டுச் சூழல் ஆகியவற்றோடு தொடர்புடைய கடவுள் ஆவார். யக்க்ஷி என்பது யக்க்ஷாவின் பெண் வடிவமாகும்.

சீனப்பெருஞ்சுவர்

இது பழங்காலத்தில் கட்டப்பட்ட தொடர்ச்சியான பல கோட்டைச் சுவராகும் குன்-சி-ஹங் என்னும் பேரரசர் தனது பேரரசின் வட எல்லையை பாதுகாப்பதற்காக கி.மு.(பொ.ஆ.மு) மூன்றாம் நூற்றாண்டில இந்தச் சுவர்களை இணைத்தார்.

ஓலிம்பியாவின் ஸியஸ் கோயில்:

கிரிஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் கி.மு.(பொ.ஆ.மு) ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் ஜியஸ் என்ற கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!