1. இந்தியாவில், ‘தேசிய துளிர்நிறுவல்கள் (start-ups) நாள்’ அனுசரிக்கப்பட்ட தேதி எது?
அ. 11 ஜனவரி
ஆ. 17 ஜனவரி
இ. 16 ஜனவரி
ஈ. 18 ஜனவரி
- கடந்த 2021ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி.16ஆம் தேதியை தேசிய துளிர் நிறுவல்கள் நாளாக அறிவித்தார். இந்த நாள் இந்திய துளிர்நிறுவல்கள் சூழலமைப்பைக் கொண்டாடுவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பினை வழங்குகிறது. தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையானது மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்துடன் இணைந்து, ஜன.10-16 வரையிலான காலத்தை தேசிய துளிர்நிறுவல்கள் வாரமாக அறிவித்தது. 2024 ஜன.11 அன்று, “Startups Unlocking Infinite Potential” என்ற கருப்பொருளின்கீழ், “துளிர் நிறுவல்கள் இந்தியா புத்தாக்க வாரம்” தொடங்கப்பட்டது.
2. அண்மையில் இந்தியாவின் எந்தப் பகுதியில் திபெத்திய பழுப்புக் கரடி காணப்பட்டது?
அ. சிக்கிம்
ஆ. மிசோரம்
இ. அஸ்ஸாம்
ஈ. அருணாச்சல பிரதேசம்
- ஓர் அரிய கிளையினமான திபெத்திய பழுப்புக் கரடி, அண்மையில் இந்தியாவிலேயே முதன்முறையாக சிக்கிமில் காணப்பட்டது. அறிவியல் ரீதியாக Ursus arctos pruinosus என்று அழைக்கப்படும் இது வரலாற்று ரீதியாக அல்பைன் கிழக்குத்திபெத்திய பீடபூமியைச் சார்ந்ததாகும். அடர்பறட்டையான மென்மயிரும் வெண்கழுத்துப்பட்டையும் போன்ற தனித்துவமான அம்சங்களுடன், இந்தக்கரடிகள் காணப்படுகின்றன. மர்மோட்டு (அனில் வகை) மற்றும் ஆல்பைன் தாவரங்களை அவை விரும்பி உண்கின்றன. அரிதாகக் காணப்பட்ட போதிலும், தற்போது IUCN சிவப்புப்பட்டியலில், “தீவாய்ப்பு கவலைகுறைந்த இனம்” என்ற பிரிவில் அவை பட்டியலிடப்பட்டுள்ளன.
3. உழவர்களுக்கு பன்மொழிகளில் வானிலை சேவைகளை வழங்குகிற IMDஇன் இணையதளம் எது?
அ. மான்சூன் மிஷன் போர்டல்
ஆ. பஞ்சாயத்து மௌசம் சேவா போர்டல்
இ. மான்சூன் ரிசர்ச் அஜெண்டா போர்டல்
ஈ. மௌசம் சேவா போர்டல்
- பஞ்சாயத்து மௌசம் சேவா இணையதளமானது இந்திய வானிலை ஆய்வுத்துறை, புவி அறிவியல் அமைச்சகம், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் பசுமை விழிப்பூட்டல் மௌசம் சேவா ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், ஒவ்வொரு பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலாளருக்கும் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பன்னிரெண்டு பிராந்திய மொழிகளில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்குகிறது. சரியான நேரத்தில் வானிலை எச்சரிக்கைகள் அளித்து செலவுகள் மற்றும் பயிரிழப்புகளைக் குறைத்தல்மூலம் உழவர்களுக்கு உதவுவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
4. ‘ஆயூத்தியா’ என்பது கீழ்காணும் எந்த இருநாடுகளால் நடத்தப்படும் கடல்சார் பயிற்சியாகும்?
அ. இந்தியா & சீனா
ஆ. இந்தியா & தாய்லாந்து
இ. இந்தியா & ரஷ்யா
ஈ. இந்தியா & ஜப்பான்
- இந்தியாவில் உள்ள அயோத்தி மற்றும் தாய்லாந்தில் உள்ள அயூத்தியா இடையேயான வரலாறுசார் உறவுகளை அடையாளப்படுத்தும் வகையில், இந்திய கடற்படைக்கும் தாய்லாந்து ராயல் கடற்படைக்கும் இடையிலான முதல் இருதரப்பு கடல்சார் பயிற்சியான, ‘அயூத்தியா’ நடைபெற்றது. இந்திய கடற்படை கப்பல்களான குலிஷ் மற்றும் IN LCU 56 ஆகியவை இதில் பங்கேற்றன. 36ஆவது இந்தோ-தாய் CORPAT பயிற்சியும் இதே சமயத்தில் நடத்தப்பட்டது.
5. லித்தியம் ஆய்வு மற்றும் சுரங்கப்பணிக்காக கீழ்காணும் எந்த நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது?
அ. ஆஸ்திரேலியா
ஆ. ரஷ்யா
இ. ஈரான்
ஈ. அர்ஜென்டினா
- லித்தியம் ஆய்வு மற்றும் சுரங்கப்பணிக்கான ஒப்பந்தத்தில் அர்ஜென்டினாவுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் அரசுக்குச் சொந்தமான கானிஜ் பிதேஷ் இந்தியா லிட் (KABIL) மற்றும் அரசு நடத்தும் நிறுவனமான CATAMARCA MINERA Y ENERGÉTICA SOCIEDAD DEL ESTADO (CAMYEN SE) ஆகியவற்றால் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு $24 மில்லியன் ஆகும்.
- காடமர்கா மாகாணத்தில் உள்ள ஐந்து லித்தியம் தொகுதிகளை ஆராய KABIL பிரத்தியேக உரிமைகளை இந்த ஒப்பந்தம் வழங்குகிறது. இந்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தால் லித்தியம் ஆய்வு மற்றும் சுரங்கப்பணித் திட்டம் மேற்கொள்ளப்படுவது இதுவே முதன்முறையாகும்.
6. அண்மையில், FIFAஇன் சிறந்த வீரர் விருதைப் பெற்றவர் யார்?
அ. கிறிஸ்டியானோ ரொனால்டோ
ஆ. லியோனல் மெஸ்ஸி
இ. நெய்மர்
ஈ. ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி
- 2023ஆம் ஆண்டிற்கான FIFAஇன் ‘சிறந்த வீரர்’ விருதை லியோனல் மெஸ்ஸி வென்றார். தேர்வுக்கான இறுதிப் பட்டியலில் எர்லிங் ஹாலண்ட் மற்றும் கைலியன் எம்பாப்பே ஆகியோரும் இருந்தனர். இந்த விருதை மெஸ்ஸி வெல்வது இது மூன்றாவது முறையாகும். FIFAஇன் சிறந்த வீரர் விருது முன்னர் FIFA உலகின் சிறந்த வீரர் (1991-2009) எனவும் FIFA பாலன் டி’ஓர் (2010-2015) எனவும் வழங்கப்பட்டு வந்தது. 2022 டிசம்பர்.19 முதல் 2023 ஆக.20 வரையிலான காலக்கட்டத்தில் அடைந்த சாதனைகளின் அடிப்படையில் 2023ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது.
7. இந்திய இராணுவத்தின் டாப்சி (Topchi) பயிற்சி நடைபெறும் இடம் எது?
அ. நாசிக், மகாராஷ்டிரா
ஆ. கட்ச், குஜராத்
இ. ஜெய்சல்மர், இராஜஸ்தான்
ஈ. இந்தூர், மத்திய பிரதேசம்
- மகாராஷ்டிர மாநிலம் தேவ்லாலியில் நடந்த டாப்சி பயிற்சியில் இந்திய ராணுவம் அதன் உள்நாட்டு துப்பாக்கிகளின் திறன்களை வெளிப்படுத்தியது. 2024 ஜனவரி.14 அன்று நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், K-9 வஜ்ரா, தனுஷ் மற்றும் பினாகா எறிகணைகள் உள்ளிட்ட ஆத்மநிர்பார் பாரத்தின் பீரங்கி உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. K9 வஜ்ரா என்பது லார்சன் & டூப்ரோவால் உருவாக்கப்பட்ட 155 மிமீ கண்காணிப்பு பீரங்கி அமைப்பு ஆகும். 155 மிமீ இழுவை பீரங்கி துப்பாக்கியான தனுஷும் இடம்பெற்றிருந்தது.
8. வானிலை தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் ஓர் ஒருங்கிணைந்த GIS அடிப்படையிலான சேவைகளை வழங்குகிற IMDஇன் திறன்பேசி செயலி எது?
அ. மான்சூன்
ஆ. மௌசம்
இ. அக்யூரேட் வெதர்
ஈ. ரேடார்ஸ்கோப்
- இந்திய வானிலை ஆய்வுத்துறையானது (IMD) ‘MAUSAM’ என்ற திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மணிக்கொரு முறையான முன்னறிவிப்புகள், மழைப்பொழிவு, ஈரப்பதம், சூரிய உதயம் / சூரிய அஸ்தமனம், சந்திர உதயம் / சந்திர அஸ்தமனம், மழை எச்சரிக்கை, மின்னல் எச்சரிக்கை, சூறாவளி எச்சரிக்கை மற்றும் பல போன்ற வானிலை சேவைகளை வழங்கும் ஓர் ஒருங்கிணைந்த GIS அடிப்படையிலான செயலியாகும். இச்செயலி 12 இந்திய மொழிகளில் சேவைகளை வழங்குகிறது. இணையதளம் வழியாக அணுகக்கூடிய, ‘mausamgram’ என்ற ஒன்றையும் IMD அறிமுகப்படுத்தியுள்ளது.
9. ஏழைப்பழங்குடியினருக்கு நிரந்தர வீடுகள் கட்டுவதற்கான எந்தத் திட்டத்தின் முதல் தவணையை அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்?
அ. PM-JANMAN திட்டம்
ஆ. அந்தியோதயா திட்டம்
இ. பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா
ஈ. NTR வீட்டுவசதித் திட்டம்
- ஏழைப்பழங்குடியினரின் நலனுக்காக உருவாக்கப்பட்ட பிரதம மந்திரி-ஜன்ஜாதிய ஆதிவாசி நியாய மகா அபியான் (PM-JANMAN) திட்டத்தின் ஒருபகுதியான PM-JANMAN திட்டத்தின் முதல் நிதித் தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். கடந்த 2023ஆம் ஆண்டு நவ.15 அன்று, `24,000 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் பழங்குடியினருக்கு, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்கள் பயனடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரதமர் ஆவாஸ் யோஜனா-கிராமின்கீழ், நிரந்தர வீடுகள் கட்டுவதற்கான நிதியானது நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.
10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பனாமா கால்வாய், கீழ்காணும் எந்த 2 பெருங்கடல்களை இணைக்கிறது?
அ. அட்லாண்டிக் பெருங்கடல் & பசிபிக் பெருங்கடல்
ஆ. அட்லாண்டிக் பெருங்கடல் & இந்தியப் பெருங்கடல்
இ. இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்
ஈ. பசிபிக் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்
- அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் முதன்மை செயற்கை நீர்வழியான பனாமா கால்வாய் பகுதியில் 22 மில்லியன் ஆண்டுகள் பழமையான காடுகளை அறிவியலாளர்கள் அண்மையில் கண்டுபிடித்தனர். 80 கிமீ நீளமுள்ள இந்தக் கால்வாய், குறுநிலப்பரப்பின் வழியாக கப்பல் செல்லும் நீர்நிலைகளை சரிசெய்வதற்காக ஓர் அணைப்பகுதியை கொண்டுள்ளது. 1881ஆம் ஆண்டில் பிரான்சால் தொடங்கப்பட்ட இதை, 1904இல் அமெரிக்கா கையகப்படுத்தியது; 1999 வரை அது கால்வாயை நிர்வகித்தது. 1977இல் US உடனான டோரிஜோஸ்-கார்ட்டர் ஒப்பந்தங்களைத் தொடர்ந்து 2000இல் பனாமா, கால்வாயின் முழு கட்டுப்பாட்டையும் ஏற்றுக்கொண்டது.
11. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Paramyrothecium indicum’ என்றால் என்ன?
அ. பூக்கும் செடி
ஆ. புதலிடைநோயுருவாக்குகின்ற பூஞ்சை
இ. களைக்கொல்லி எதிர்ப்புத் திறனுடைய பயிர்
ஈ. கடல்வாழ் உயிரினங்கள்
- கேரளாவில் ஒரு புதிய புதலிடைநோயுருவாக்குகின்ற (Phytopathogenic) பூஞ்சை இனத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு, ‘Paramyrothecium indicum’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பெரும்பாலான பாராமைரோ -தீசிய புதலிடைநோயுருவாக்குகிகள், பயிர் உற்பத்தியைப் பாதிக்கும் தீவிர தாவரநோய்களை ஏற்படுத்துகின்றன. பாராமைரோதீசிய இலைப்புள்ளி என்பது பல்வேறு தாவரங்களை பாதிக்கும் ஒரு வகை பூஞ்சைநோயாகும். ஆறு உயிரியல் உலகினுள் ஒன்றான பூஞ்சை, சிதைவு, தாவர நோய்கள் மற்றும் மனித தோல் வியாதிகள் உட்பட பல்வேறு வித பாதிப்புகளை ஏற்படுத்தும் யூகேரியோடிக் உயிரினங்களாகும்.
12. அண்மையில், 2022ஆம் ஆண்டிற்கான இந்திய துளிர் நிறுவல்கள் சூழல் தரவரிசையில், ‘சிறந்த செயல்திறன் மிக்கதாக’ தரப்படுத்தப்பட்ட மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. பீகார்
இ. மணிப்பூர்
ஈ. இராஜஸ்தான்
- 2022ஆம் ஆண்டுக்கான துளிர்நிறுவல் இந்தியா மாநில தரவரிசையில், ‘சிறந்த செயல்திறன் கொண்ட’ மாநிலமாக தமிழ்நாடு தெரிவாகியுள்ளது. தமிழ்நாட்டின் உத்திசார் முன்னெடுப்புகளில் 2021இல் அதன் மைய துளிர்நிறுவல் முகாமையான, ‘StartupTN’ஐ மறுசீரமைப்பது மற்றும் தமிழ்நாடு துளிர் நிறுவல் மூலநிதி (TANSEED), வளர்ந்துவரும் துறைகளுக்கான மூலநிதி மற்றும் தமிழ்நாடு SC/ST நிதியம்போன்ற புதிய நிதியங்களை தொடங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஆகியவை அடங்கும். இந்தத் தரவரிசையில் குஜராத், கர்நாடகா, கேரளா மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்டவையாகவும், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், இராஜஸ்தான் & தெலுங்கானா ஆகியவை, ‘தலைமைகள்’ எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, துளிர்நிறுவல் இந்தியா திட்டத்தின்கீழ் 7,600 துளிர்நிறுவல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
13. இந்திய கடற்படையில், ‘கப்பற்படை நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநராக’ நியமிக்கப்பட்டவர் யார்?
அ. துணை அட்மிரல் AN பிரமோத்
ஆ. துணை அட்மிரல் MA ஹம்பிஹோலி
இ. துணை அட்மிரல் R. ஹரி குமார்
ஈ. துணை அட்மிரல் தினேஷ் K திரிபாதி
- துணை அட்மிரல் AN பிரமோத், இந்திய கடற்படையில், கப்பற்படை நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநராக பொறுப்பேற்றார். AN பிரமோத், இதற்குமுன் இந்திய கடற்படையின் மகாராஷ்டிரா கடற்படைப்பிரிவின் அதிகாரியாக பணியாற்றினார். அவர், கோவாவில் உள்ள கடற்படை அகாடமியில் 38வது ஒருங்கிணைந்த கேடட் படிப்பில் பட்டம் பெற்றவராவார், 1990 ஜூலை.1இல் இந்திய கடற்படையில் பணியமர்த்தப்பட்டார். 2023 ஏப்ரல்.01 அன்று DGNOஆக நியமிக்கப்பட்ட துணை அட்மிரல் அதுல் ஆனந்தைத் தொடர்ந்து AN பிரமோத் இந்தப் பதவிக்கு வந்துள்ளார்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. ஒன்பது ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு: NITI ஆயோக்.
இந்தியாவில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 24.8 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக NITI ஆயோக் கூறியுள்ளது. கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத்தரம் என பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு வறுமையிலிருந்து மீண்டவர்கள் கணக்கிடப்பட்டுள்ளனர். இதன்படி 2013-14 முதல் 2022-23 ஆண்டு வரை 24.8 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். 2013-14 ஆண்டு காலகட்டத்தில் 29.17 சதவீதம் பேர் வறுமையில் இருந்தனர். 2022-23 காலகட்டத்தில் இது 11.28 சதவீதமாக குறைந்துள்ளது.
2. இணைய வசதியின்றி ஒளிபரப்பு: ‘D2M’ தொழில்நுட்பம் 19 நகரங்களில் விரைவில் சோதனை.
SIM அட்டை மற்றும் இணையவசதி இல்லாமல் வீடியோக்களை பார்க்க வழிவகை செய்யும் நேரடி கைப்பேசி ஒளி பரப்பு (D2M) தொழில்நுட்பம் நாட்டின் 19 நகரங்களில் விரைவில் சோதனை செய்யப்படவுள்ளது. சாங்க்யா லேப்ஸ் மற்றும் ஐஐடி கான்பூரால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நேரடி கைப்பேசி ஒலிபரப்பு (டைரக்ட்-டு-மொபைல் – டி2எம்) தொழில்நுட்பமானது தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு மற்றும் பொது ஒலிபரப்பாளருக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றை ஆகியவற்றைப் பயன்படுத்தி, நேரடியாக கைப்பேசிகளுக்கு வீடியோ, ஆடியோ மற்றும் தரவு சமிக்ஞைகளை அனுப்பும். நாடுதழுவிய அவசரகால எச்சரிக்கை அமைப்பை நிறுவுவதற்கு இது வழிவகுக்கும். இதற்காக 470-582 MHz அலைக்கற்றையை ஒதுக்குவதற்கான வலுவான தளம் உருவாக்கப்படவுள்ளது.
3. அலங்காநல்லூரில் ஏறுதழுவுதல் அரங்கம்: ஜன.24இல் திறந்து வைக்கிறார் முதலமைச்சர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கீழக்கரையில் முன்னாள் முதலமைச்சர் ‘கலைஞர்’ மு கருணாநிதி பெயரிலான பிரமாண்ட ஏறுதழுவுதல் அரங்கம் வரும் ஜனவரி.24ஆம் தேதி திறக்கப்படுகிறது. இந்த அரங்கத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளார். இந்த அரங்கத்துக்கு, ‘கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
4. தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்.
ஜன.15 முதல் பிப்.14 வரை தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு, தேசிய சாலைப்பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது. சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விபத்தில்லாப் பயணத்தை உறுதிசெய்வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் முக்கிய நோக்கமாகும்.