அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல் Book Back Questions 8th Science Lesson 8

8th Science Lesson 8

8] அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பாகவே சீனாவில் ராக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. ஆரம்ப நாள்களில், மரக் குழாய்களில் வெடிமருந்து நிரப்பப்பட்டு ராக்கெட்டுகள் உருவாக்கப்பட்டன. இவற்றை தீ அம்புகள் (Fire Arrows) என அவர்கள் அழைத்தனர். கி.பி. 1232இல் மங்கோலிய ராணுவ வீரர்களுடன் போரிடுவதற்காக சீனர்கள் இந்த தீ அம்புகளைப் பயன்படுத்தினர். ராக்கெட் உருவாக்கும் இந்த முறையானது விரைவில் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவியது. அவர்கள் ராக்கெட்டை ஒரு போர்க் கருவியாகப் பயன்படுத்தினர்.

துருவத் துணைக்கோள் செலுத்து வாகனம் (PSLV) மற்றும் புவிநிலைத் துணைக்கோள் செலுத்து வாகனம் (GSLV) ஆகியவை இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற ராக்கெட்கள் ஆகும்.

இந்தியா, சோவியத் ரஷ்யாவுடன் இணைந்து நடத்திய ஒரு விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் மூலம் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் ஷர்மா என்ற விமானி விண்வெளிக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம், விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை 1984ஆம் ஆண்டு ஏப்ரல் இரண்டாம் நாள் இவர் பெற்றார்.

கலாம்சாட் என்பது 64 கிராம் மட்டுமே எடை கொண்ட உலகின் மிகச் சிறிய செயற்கைக் கோள் ஆகும். இது தமிழகத்தின் கரூர் நகருக்கு அருகில் உள்ள பள்ளப்பட்டி என்ற சிற்றூரில் ரிபாத் ஷாருக் என்னும் 18 வயது பள்ளி மாணவனின் தலைமையில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டது. இது 2017ஆம் ஆண்டு ஜீன் 22ஆம் நாள் நாசா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

முனைவர்.மயில்சாமி அண்ணாதுரை கோயமுத்தூர் மாவட்டம், பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள கோதவாடி என்னும் சிற்றூரில் 1958ஆம் ஆண்டு ஜீலை 2ஆம் நாள் பிறந்தார். இவர் தன் இளங்கலை பொறியியல் பட்டத்தை கோயமுத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பெற்றார். 1982ஆம் ஆண்டு பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றதுடன், அதே ஆண்டில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் ஆய்வாளராகப் பணியேற்றார். பிறகு, கோயம்புத்தூர், அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். இவர் செயற்கைக்கோள் துறையில் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். இவர் சந்திரயான்-1ன் திட்ட இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். குறைந்த செலவில் சந்திராயனை வடிவமைத்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

சூரியனிலிருந்து நான்காவதாக அமைந்துள்ள கோள் செவ்வாய் ஆகும். இதுவே சூரியக் குடும்பத்திலுள்ள இரண்டாவது சிறிய கோளாகும். இதன் சிவந்த நிறத்தின் காரணமாக இது சிவப்புக் கோள் என்று அழைக்கப்படுகிறது. இக்கோளின் மேற்பரப்பில் உள்ள இரும்பு ஆக்சைடு மற்றும் அதன் வளிமண்டலத்தில் உள்ள தூசுகள் அதற்கு சிவப்பு நிறத்தைத் தருகின்றன. இது தன் அச்சில் 24 மணி 37 நிமிடங்களில் தன்னைத்தானே சுற்றி வருகிறது. மேலும், 687 நாட்களுக்கு ஒரு முறை சூரியனையும் சுற்றி வருகிறது. இதன் சுற்றுக்காலம் மற்றும் கால நிலை ஆகியவை பூமியை ஒத்திருப்பதால், வானியலாளர்கள் செவ்வாய்க் கோள் பற்றிய ஆய்வுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, அவர்கள் செவ்வாயின் மேற்பரப்பு, காலநிலை மற்றும் புவியியல் நிலை குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, பல்வேறு ஆளில்லா விண்கலங்களை அனுப்பி வருகின்றனர்.

முனைவர்.கைலாசம் வடிவு சிவன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவகத்தின் தற்போதைய தலைவர் ஆவார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரக்கல்விளை என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் வானூர்திப் பொறியியலில் இளங்கலைப் பட்டத்தை, 1980ஆம் ஆண்டு சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் பெற்றார். 1982ஆம் ஆண்டு தன் முதுகலை பொறியியல் பட்டத்தை, பெங்களுருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்திலிருந்து பெற்ற பின் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். மேலும், இவர் தனது முனைவர் பட்டத்தை, மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் 2006ம் ஆண்டு பெற்றார். கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 10ஆம் நாள் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்திய விண்வெளித் திட்டங்களில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் இயந்திர தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு இவர் அளித்த சிறந்த பங்களிப்பின் காரணமாக இவர் ராக்கெட் மனிதர் என்று அழைக்கப்படுகிறார். ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களை இஸ்ரோ செலுத்தியது இவரது திறமைக்குச் சான்றாகும்.

நம் இந்திய நாடு, செவ்வாய்க் கோளை அடைந்த முதல் ஆசிய நாடு என்ற பெருமையையும், உலகிலேயே, இச்சாதனையை தன் முதல் முயற்சியிலேயே நிகழ்த்திய நாடு என்ற பெருமையையும் கொண்டுள்ளது. சோவியத் விண்வெளி ஆய்வு நிறுவனம், நாசா, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை செவ்வாய்க்கோளை அடைந்த பிற விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் ஆகும்.

பூமியின் ஒரே இயற்கைத் துணைக்கோள் சந்திரன் ஆகும். இது பூமியிலிருந்து சுமார் 3,84,400 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் விட்டம் 3474 கி.மீ ஆகும். சந்திரனில் வளிமண்டலம் இல்லை. சந்திரன் தாமாக ஒளிர்வது இல்லை. இது சூரியனிலிருந்து வரும் ஒளிகதிர்களையே எதிரொளிக்கிறது. இது தன்னைத்தானே சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நேரமும், பூமியைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நேரமும் சமமாக இருப்பதால் நாம் எப்போதும் சந்திரனின் ஒரு பகுதியையே பார்க்கிறோம்.

சந்திரனில் தரையிறங்கிய அப்போலோ-11 விண்கலத்தில் பயணித்தவர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங், புஷ் ஆல்டிரின் மற்றும் மைக்கல் காலின்ஸ் ஆவர்.

கல்பனா சாவ்லா விண்வெளியில், பூமியின் சுற்று வட்டப்பாதைகளில் 10.4 மில்லியன் மைல்கள் பயணம் செய்துள்ளார். மேலும் 372 மணிநேரத்திற்கும் மேலாக விண்வெளியில் தங்கியிருந்துள்ளார்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பின்வருவனவற்றுள் எது வான்பொருள்?

(அ) சூரியன்

(ஆ) சந்திரன்

(இ) விண்மீன்கள்

(ஈ) இவை அனைத்தும்

2. மங்கள்யான் __________க்கு அனுப்பப்பட்டது.

(அ) சந்திரன்

(ஆ) செவ்வாய்

(இ) வெள்ளி

(ஈ) புதன்

3. சந்திரயான்-1 விண்ணில் செலுத்தப்பட்ட நாள்

(அ) 2008 அக்டோபர் 22

(ஆ) 2008 நவம்பர் 8

(இ) 2019 ஜீலை 22

(ஈ) 2019 அக்டோபர் 22

4. சிவப்புக் கோள் என்று அழைக்கப்படுவது __________

(அ) புதன்

(ஆ) வெள்ளி

(இ) பூமி

(ஈ) செவ்வாய்

5. ராக்கெட்டில் பயன்படும் தத்துவம் ______________

(அ) நியூட்டனின் முதல் விதி

(ஆ) நியூட்டனின் இரண்டாம் விதி

(இ) நியூட்டனின் மூன்றாம் விதி

(ஈ) இவை அனைத்தும்

6. கிரியோஜெனிக் எரிபொருள் _____________ எவ்வெப்ப நிலையில் சேகரித்து வைக்கப்படும்?

(அ) அறை

(ஆ) குறைந்த

(இ) மிகக்குறைந்த

(ஈ) மிக அதிக

7. நாசாவின் ____________ திட்டம் முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது.

(அ) அப்போலோ-5

(ஆ) அப்போலோ-8

(இ) அப்போலோ-10

(ஈ) அப்போலோ-11

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. விண்மீன்களைப் பற்றியும், கோள்களைப் பற்றியும் படிக்கும் அறிவியல் பிரிவு ____________

2. சூரியன் __________ விண்மீன் திரளைச் சார்ந்தது.

3. செவ்வாய்க்கோள் _________ நாட்களுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றி வருகிறது.

4. பிற கோள்களுக்கு விண்கலனை அனுப்பிய முதல் இந்திய விண்வெளித் திட்டம் ___________

5. நிலவின் மேற்பரப்பில் நடந்த முதல் மனிதர் _________ ஆவார்

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான கூற்றைத் திருத்தி எழுதுக:

1. சூரியன் மற்றும் இதர வான்பொருள்கள் சேர்ந்து சூரியக் குடும்பத்தை உருவாக்குகின்றன.

2. சந்திரயான்-1 ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

3. செவ்வாய்க் கோள் சூரியக் குடும்பத்தில் உள்ள மிகச் சிறிய கோள் ஆகும்.

4. PSLV மற்றும் GSLV ஆகியவை இந்தியாவின் புகழ்பெற்ற செயற்கைக் கோள்கள் ஆகும்.

5. ராக்கெட்டின் இயக்கு பொருள்கள் திண்ம நிலையில் மட்டுமே காணப்படும்.

IV. பொருத்துக:

1. சந்திரயான் – அ. எரிபொருள்

2. மங்கள்யான் – ஆ. சந்திரன்

3. கிரையோஜெனிக் – இ. முதன்முதலில் மனிதனை நிலவுக்கு அனுப்பிய திட்டம்

4. அப்போலோ-8 – ஈ. முதன்முதலில் மனிதனை நிலவில் தரையிறங்கச் செய்த திட்டம்

5. அப்போலோ-11 – உ. செவ்வாய்

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இவை அனைத்தும், 2. செவ்வாய், 3. 2008 அக்டோபர் 22, 4. செவ்வாய், 5. நியூட்டனின் மூன்றாம் விதி, 6. மிகக்குறைந்த,

7. அப்போலோ-8

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வானியல், 2. பால், 3. 687, 4. மங்கள்யான், 5. நீல் ஆம்ஸ்ட்ராங்க்

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான கூற்றைத் திருத்தி எழுதுக:

1. சரி, 2. சரி, 3. இரண்டாவது பெரிய கோள், 4. ராக்கெட்கள், 5. திண்ம அல்லது திரவ

IV. பொருத்துக:

1. ஆ, 2. உ, 3. அ, 4. இ, 5. ஈ

Exit mobile version